அதிமுக கூட்டணியில் நம்பர் 2 கூட ஆக முடியலையே.. பரிதாப நிலையில் தேமுதிக!
அதிமுக கூட்டணியில் தேமுதிக பரிதாப நிலையில் உள்ளதாக தெரிகிறது.
சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. ஆனால் கூட்டணியில் நம்பர் டூ இடத்தைக் கூட அந்த கட்சியால் பிடிக்க முடியாமல் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
திமுகவையே பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சி என்ற மிகப் பெரிய நிலைக்கு கட்சியை கொண்டு வந்தவர் விஜயகாந்த். ஆனால் இன்று அந்தக் கட்சியை வெறும் 4 சீட்டுக்காக கிட்டத்தட்ட 2 வாரம் கடுமையாக போராடி, தண்ணீர் குடிக்க வைத்து விட்டது அதிமுக.
தேமுதிக தலைகீழாக நின்றும் கூட தான் நினைத்ததை சாதிக்க முடியவில்லை. திமுக அதிரடியாக கதவை சாத்தி விட்டதால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக வேறு வழியில்லாமல் அதிமுகவிடம் பணிந்து போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நிச்சயம் இது விஜயகாந்த் அனுதாபிகளுக்கு ஜீரணிக்க முடியாத விஷயமாகும்.
அத்தனை அரசியல்வாதிகளும் இவரைச் சுற்றி.. பரபரக்கும் ராமநாதபுரம்.. யார் இந்த தேவசித்தம்!
கடும் உழைப்பாளி
தேமுதிகவை உருவாக்கி, ஊர் ஊராக கிராமம் கிராமமாக சென்று சூறாவளியாய் சுழன்று வளர்த்து ஆளாக்கியவர் விஜயகாந்த். அவரைப் போன்ற ஒரு கடுமையான உழைப்பாளியை சமீப காலத்தில் யாரும் பார்த்திருக்க முடியாது. கட்சியை உருவாக்கியதோடு நில்லாமல் அதை வளர்த்து ஆளாக்க அவர் பட்ட பாடு அவருக்கு மட்டுமே தெரியும்.
வெறும் 4 தான்
ஆனால் இன்று இருக்கும் இடம் இல்லாமல் தடம் இல்லாமல் போய் தகர்ந்து கிடக்கிறது தேமுதிக. இதற்கு யார் காரணம் என்பது தேமுதிகவினருக்கே நன்கு தெரியும். இன்று வெறும் 4 சீட்டுகளுக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டனர் சம்பந்தப்பட்டவர்கள்.
2-வது பெரிய கட்சி
அன்று ஜெயலலிதாவுக்கு எதிராக நேருக்கு நேர் சட்டசபையில் நின்று முழங்கியவர் விஜயகாந்த். தமிழகத்தின் 2வது பெரிய கட்சியாக உருவெடுத்து அதிசயிக்க வைத்தவர் விஜயகாந்த். இன்று அக்கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 4வது இடமே கிடைத்துள்ளது.
பின்னடைவு
அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் பாமக, அதற்கு அடுத்த இடத்தில் பாஜக உள்ளன. அதற்கு அடுத்த இடம்தான் தேமுதிகவுக்கு. இது விஜயகாந்த் கட்சிக்கு நிச்சயம் மிகப் பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமே இல்லை. கட்சிக்காரர்கள் முழு மனதுடன் கூட்டணி வெற்றிக்காக பாடுபடுவார்களா என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.