பாமகவை விட ஒரு தொகுதி எக்ஸ்ட்ரா கொடுக்கணும்.. பிரேமலதா பிடிவாதம்.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டுமென்றால், பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையை விடவும் கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் டிமாண்ட் வைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி கடுமையான அப்செட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியை விரிவாக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருகிறார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமகவின் அன்புமணி தரப்பில் கூட்டணியை பேசி முடித்து, தொகுதி பங்கீட்டையும் நிறைவு செய்துள்ளது. இதனால் தேமுதிகவும் கூட்டணிக்கு வந்தால், வடமாவட்டங்களில் அதிமுக கூடுதல் வலிமைபெறும்.

இதனை கணக்கில் கொண்டே எடப்பாடி பழனிசாமி தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஆலோசித்து வருகிறார். ஜனவரி 9ஆம் தேதி தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டை உரிமை மீட்பு மாநாட்டில் அறிவிப்பேன் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், திடீரென கூட்டத்தை கூட்டிவிட்டு தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறி ஜெகா வாங்கினார்.
இது தேமுதிக தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி டிமாண்ட்டை உயர்த்துவதாக பார்க்கப்படுகிறது. அதன்படி திமுக கூட்டணி சார்பாக தேமுதிகவுக்கு 8+1 என்ற கணக்கில் சீட் ஒதுக்கப்படும் என்ற ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது.
மறுமுனையில் அதிமுகவிடம் 18 தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா சீட்டையும் தேமுதிக கோரி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை விடவும் தேமுதிகவுக்கு ஒரு தொகுதி கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் டிமாண்ட் வைத்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.
அதற்கு லோக்சபா தேர்தல் கணக்கும் ஒரு காரணமாக கூறுகின்றனர். ஏனென்றால் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி பாமக சென்ற போதும், தேமுதிக உறுதியுடன் அதிமுக பக்கம் நின்றது. இதனால் தேமுதிக டிமாண்ட்டை ஏற்பதா, வேண்டாமா என்று முடிவு எடுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் தமிழ்நாட்டில் தேமுதிகவுக்கான பூத் கமிட்டி இன்னும் கரையாமல் அப்படியே உள்ளது. திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு பின் தேமுதிகவில் சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமான பூத் கமிட்டி அப்படியே உள்ளது. இதனால் தேமுதிகவின் கட்டமைப்பு பாமகவை விடவும் அதிகம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications