கூட்டணி யாருடன்? தேமுதிகவில் நீடிக்கும் கேள்விக்குறி.. இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார் பிரேமலதா!
சென்னை: தேமுதிக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேமுதிக அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை மேற்கொள்கிறார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசியல் களம் பரபரத்து வருகிறது. தேர்தல் வியூகங்கள் அமைப்பது, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்பான செய்திகள் தமிழகத்தில் நாள்தோறும் அலையடிக்கின்றன.
தற்போது வரை அதிமுக கூட்டணியில் இருந்து வரும் தேமுதிக, 2026 தேர்தல் கூட்டணி குறித்து தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. அதிமுகவிடம் தேமுதிக ராஜ்யசபா சீட் கேட்ட நிலையில், 2026ல் சீட் வழங்கப்படும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அதிமுக கூட்டணியில் 2026 சட்டசபை தேர்தலிலும் தேமுதிக கூட்டணி தொடருமா என்ற விவாதங்கள் நடக்கின்றன.
ஒருபக்கம் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பான கேள்விக்கு "தவெகவுடன் கூட்டணியா என்றால், தேமுதிகவும் கூட்டணியா என்பது குறித்து நீங்கள் விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். அதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில் நாங்கள் கட்சி தொடங்கி 20 வருடங்கள் ஆகிவிட்டது" என பிரேமலதா கூறி இருந்தார்.
அதேநேரம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ள விஜய பிரபாகரன், தற்போது தேமுதிக வளர்ச்சியை நோக்கி தான் எங்கள் நிலைப்பாடு உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், 2026 ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியை பற்றி அறிவிப்பார். 2026-ல் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்போமா என்ற கேள்விக்கும் ஜனவரி 9 தான் பதில் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், தேமுதிக சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதற்காக சென்னையில் நான்கு நாட்கள் கூட்டம் நடைபெறுகிறது. இன்று தேர்தல் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் உடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இன்று ( ஜூன் 11) முதல் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கூட்டணி வாய்ப்பு, உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது, கட்சியை வலுப்படுத்துவது, தேர்தல் வியூகங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications