இன்று முதல் தேமுதிக விருப்ப மனு விநியோகம்.. பிரேமலதா விஜயகாந்த்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன?
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனது தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாக முடுக்கிவிட்டிருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறும் பணி இன்று முதல் தொடங்கியிருக்கிறது. கூட்டணி
தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட ஆர்வமுள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று முதல் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த மனு விநியோகமானது இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில போட்டியிட விரும்பும் தேமுதிக தொண்டர்களுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட ஆர்வம் உள்ளவர்கள் பிப். 6-ம் தேதி (இன்று) முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வரும் பிப்ரவரி 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். தேமுதிகவின் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கும் எவரும் இந்தத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
இதில் பொது தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் விருப்ப மனு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை முதலே மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளைக் கழக நிர்வாகிகள் வரை பலரும் ஆர்வத்துடன் அலுவலகத்திற்கு வந்து விருப்ப மனுக்களைப் பெற்றுச் செல்ல காத்திருக்கிறார்கள்.
கட்சித் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.. அனேகமாக இந்த வாரத்தில் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விருப்ப மனு விநியோகம் ஒருபக்கம் நடந்தாலும் கூட்டணி பேச்சிலும் பிரேமலதா ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த முறை திமுக தலைமையிலான கூட்டணியா அல்லது பாஜக கூட்டணியா என்பது விரைவில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications