வெடிக்கிறது பூகம்பம்.. கூடுதல் சீட் வாங்குங்க.. இல்லாட்டி நாங்க கிளம்புறோம்..நெருக்கும் தேமுதிகவினர்
Recommended Video

சென்னை: பாமகவை விட குறைவான இடங்களில் போட்டியிட்டால் நமது சுயமரியாதை என்னாவாது என்று யோசிக்கிறார்களாம் தேமுதிக மேல் மட்டத்தினர். அதாவது பிரேமலதா விஜயகாந்த்தும், சுதீஷும். இதனால்தான் குறைந்த சீட்டுக்கு ஒத்து வராமல் இழுத்தடித்து தங்களது தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
தமிழகத்தில் எந்த கட்சிகள் எந்த அணியில் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. தேமுதிகவும் தமாகவும் மட்டும் இன்னமும் ஆலோசனயிலேயே காலத்தை கடத்துகின்றன. தேமுதிக அதிமுக அணியோடுதான் இணையும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே இருந்துவந்தது. அதற்கேற்றார்போல அந்த கட்சி தேசிய ஜனநயாக கூட்டணியில் இருந்து வெளியில் வந்துவிட்டோம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமலே இருந்ததும் ஒரு காரணம்.
இந்த நிலையில் பாஜக, பாமக அதிமுக கூட்டணி முடிவடைந்து அறிவிக்கப்பட்டதும் மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். அன்றே கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிடும் என்று தகவல்கள் வெளியானது ஆனால் இன்று வரை நிலைமை அப்படியேதான் நீடிக்கிறது.

ராமதாஸ் ஆப்பு
விஜயகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று கூறிவந்த காலத்தில் இருந்தே விஜயகாந்தை கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமதாஸ். அதன் பின்னர் 2006 ம் ஆண்டு கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் முதலில் போட்டியிட்டு வென்றது விருத்தாசலத்தில். அவர் வெற்றி பெற காரணமாக அமைந்தது வன்னியர் வாக்குகள். இதனால் ராமதாசுக்கு விஜயகாந்த் மீதிருந்த கோபம் இன்னும் அதிகரித்தது.

பரம வைரிகள்
அடுத்தடுத்து வந்த தேர்தல்களிலும் வன்னியர் வாக்கு வங்கிக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தினார். இதனால் பரம வைரிகளாக மாறின இரு கட்சிகளும். இப்படியே வளர்ந்த பகை கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலித்தது. பாமக போட்டியிட்ட இடங்களில் எல்லாம் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். ஆனால் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதிஸ் போட்டியிட்ட தொகுதியில் கூட பாமகவினர் வேலையும் செய்யவில்லை. அதோடு ராமதாசும் பிரச்சாரம் செய்யவில்லை.

போட்டா போட்டி போடும் தேமுதிக
அந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சியாக தேமுதிகவே இருந்தது. பாமகவை விட அதிகப்படியான இடங்களில் போட்டியிட்டார்கள். இப்போது இந்த தேர்தலில் தேமுதிகவுக்கு இதுதான் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அதிமுக கூட்டணியில் முதலில் பாமக தரப்பில் பேசியவர்கள் அவர்களுக்கு 7 மக்களவை தொகுதிகளையும் 1 ராஜ்யசபா சீட்டையும் வாரி வழங்கினர். இதனால் தேமுதிகவும் தங்களுக்கு பாமகவுக்கு வழங்கப்பட்டதை விட குறைந்தது ஒரு இடமாவது அதிகம் வேண்டும் என்று அடம் பிடிகிறது. பாமகவுக்கு இவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்காவிடில் தேமுதிகவும் இவ்வளவு அடம் பிடித்திருக்காது.

வெறும் ஈகோதான்
தங்கள் பரம வைரி இருக்கும் அணியில் தாங்களும் இடம் பெற வேண்டுமென்றால் அவர்களை விட ஒரு இடம் அதிகம் இருந்தால்தான் தங்களுக்கு கவுரமாக இருக்கும் என்று தேமுதிக தலைமையும் தொண்டர்களும் கருதுகிறார்கள். இந்த நிலையில் அதிமுக, திமுக என இரு அணிகளோடும் மாறி மாறி பேசி வந்த தேமுதிகவுக்கு திமுக கேட்டை இழுத்து மூடிவிட்டது. இப்போது அதிமுகவுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் அதிமுக மட்டுமே. அல்லது தினகரன் போன்றோர்களோடோ அல்லது தனித்தோ களம் காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பணம் வேண்டும்
பணம் + தொகுதிகள் என்று இருதரப்பிடமும் தேமுதிக பேசிவந்தது அக்கட்சி தொண்டர்களுக்கே பிடிக்கவில்லை. கடந்த முறை நடராசன் பணம் கொடுத்ததால்தான் தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்கு சென்றார்கள் என்ற பேச்சு பரவலாக இருந்தது. இப்போதும் கூட்டணி பேச்சு வார்த்தையில் பணம்தான் பிரதானமாக இருக்கிறது என்ற பேச்சு தேமுதிக தொண்டர்கள் மத்தியில் காணப்படுகிறது. இதனால் அவர்கள் விரக்தியில் உள்ளனர்.

தொண்டர்கள் கிளம்பத் தயார்
இந்த நிலையில் திமுகவும் கதவை சாத்தி விட்டதால் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் பலரும் மீண்டும் அதிமுக கூட்டணியில் சேருவதாக இருந்தால் பாமகவை விட குறைந்தது ஒரு தொகுதியாவது கூடுதல் வாங்குங்கள். அல்லது எங்களை போக விடுங்கள் என்று கூறிவருகிறார்களாம். இதனால் தேமுதிக தலைமை அதிர்ச்சியில் உள்ளது. அதிமுக அணியில் தேமுதிக சேர்வது என்றால் பாமகவை விட குறைந்த இடங்களில் போட்டியிட்டால் தங்களால் வடமாவட்டங்களில் சுயமரியாதையோடு தேர்தல் பணியாற்ற முடியாது என்பது அப்பகுதி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மன நிலை. என்ன செய்யப்போகிறது தேமுதிக?












Click it and Unblock the Notifications