நேத்துதான் அப்படி சொன்னாரு.. அடுத்தநாளே கிளம்பிட்டாங்களே.. ஈரோடு தேர்தலை நிறுத்தக் கோரி தேமுதிக மனு!
இடைத்தேர்தலை நிறுத்துமாறு தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா அதிகளவில் நடைபெறுவதால், இந்த இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் தேமுதிக புகார் மனு அளித்துள்ளது.
பல்வேறு புகார்கள் வந்தாலும், தேர்தலை நிறுத்துவது தொடர்பாக புகார்கள் எதுவும் தன்னிடம் வரவில்லை என நேற்று தான் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேமுதிக சார்பில் இந்த இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பாக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்ட 77 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக, அதிமுக என அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஈரோடு கிழக்கில் குவிந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணப் பட்டுவாடா
ஈரோடு கிழக்கு தொகுதியில், வாக்காளர்களை கவரும் வகையில் பணப் பட்டுவாடா, குக்கர், பட்டுப்புடவை, வெள்ளி கொலுசு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சியினர் வழங்கி வருவதாக இரு கட்சிகளும் மாற்றி மாற்றி புகார் கூறி வருகின்றனர். நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகளும், திமுக, அதிமுகவினர் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் பிரச்சாரத்தின்போதே திமுக தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்றும் பேசி வருகிறார்.

தேமுதிக புகார் மனு
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை தேமுதிக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து புகார் அளித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப் பட்டுவாடா பயங்கரமாக நடைபெறுவதாகவும், அதனால் இடைத்தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்றும் தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளது.

வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக வழக்கறிஞர் அணி செயலாளர் ஜனார்த்தனன், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம். தற்போது உள்ள சூழ்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

நீதிமன்றத்தை நாடுவோம்
மேலும், "ஈரோடு இடைத்தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதால் தேர்தலை நிறுத்த வேண்டும் என தமிழக தேர்தல் அலுவலரிடம் வலியுறுத்தியுள்ளோம். இன்று நாங்கள் கொடுத்துள்ள புகார் மனு மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவோம்" எனத் தெரிவித்தார்.

நேற்றுதான் சொன்னார்
தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுவரை ரூ. 61.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியது தொடர்பாக அரசியல் கட்சியினர் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு புகார்கள் வந்தாலும், தேர்தலை நிறுத்துவது தொடர்பாக புகார்கள் எதுவும் தன்னிடம் வரவில்லை எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று தேர்தலை நிறுத்தக் கோரி அவரிடமே மனு அளித்துள்ளது தேமுதிக.












Click it and Unblock the Notifications