அதிக சீட் தரும் கட்சியுடன் கூட்டணி.. தேமுதிக மா.செக்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அறிவித்த பிரேமலதா
சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணி நிலைப்பாடு குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரேமலதா.
மறைந்த நடிகர் விஜயகாந்த் 2005-ம் ஆண்டு தேமுதிகவை உருவாக்கினார். மறைந்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் எதிராகவே அரசியல் பயணத்தை தொடங்கினார் விஜயகாந்த். 2006 சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிட்டு 8.3% வாக்குகளைப் பெற்றார் விஜயகாந்த். இதனால் தேமுதிக கவனம் பெற்ற கட்சியாக உருவெடுத்தது.

2011 சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு டிமாண்ட் அதிகரித்தது. அத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29-ல் வென்றது. தேமுதிகவின் வாக்கு சதவீதம் 7.8%. தமிழ்நாட்டு சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சியாகவும் தேமுதிக அமர்ந்தது. ஆனால் இதுதான் தேமுதிகவின் கடைசி தேர்தலாகவும் அமைந்து போனது துயரமானது. 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் முன்னிறுத்தப்பட்டு பெரும் தோல்வியை தழுவினார். 2021 தேர்தலிலும் தேமுதிக பெரும் தோல்வியை தழுவியது. இதனால் அதிமுக, திமுக, பாஜக என எந்த கட்சிகளும் தேமுதிகவை சீண்டவே இல்லை. டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அழைப்பு வரும் என காத்திருந்து ஏமாந்து போனது தேமுதிக.
அதேநேரத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவின் போது பல லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்த அக்கட்சியும் மெல்ல உயிர் பெற்றதாக கருதப்பட்டது. விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட சில நிமிடங்களில் அவரது மனைவி பிரேமலதா பேசிய பேச்சுகள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அந்த அளவு அரசியலாக்கிக் கொண்டிருந்தார்.
தற்போது லோக்சபா தேர்தல் களம் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தேமுதிகவும் விஜயகாந்த் மறைவால் கவனம் பெற்றிருக்கிறது. தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக, அதிமுக இரு கட்சிகளுமே தீவிரமாக முயற்சிக்கின்றன. தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா இதனை தெளிவாக புரிந்து கொண்டு பேரம் பேசிக் கொண்டே இருக்கிறார்.
பிரேமலதா, தேமுதிகவுக்கு 4 லோக்சபா சீட், 1 ராஜ்யசபா சீட் கொடுத்தால்தான் கூட்டணி என கறாராக சொல்லிக் கொண்டிருக்கிறாராம். ஆனால் பாஜகவும் அதிமுகவும் இதனை ஏற்க முடியாமல் தத்தளிக்கின்றன. இந்த நிலையில்தான் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றுள்ளது.
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிகவுக்கு, தாங்கள் எதிர்பார்க்கும் சீட்களை தரும் கட்சியுடன் கூட்டணி என்றும், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி அமைத்த தேமுதிக, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பின் வெளியாகும் என தேமுதிக தலைமை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது பேசிய அவர், அதிக சீட் தரும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும். இதுவரை நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தனித்து போட்டியிட விரும்புகின்றனர் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications