விஜய பிரபாகரன் பதவிக்கு வந்ததில் மகிழ்ச்சி.. ஆனால்.. நல்லதம்பி எடுத்த முடிவுக்கு காரணமே இதுதானாம்!
சென்னை: தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி, கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பிரேமலதா விஜயகாந்துக்கு கடிதம் எழுதியுள்ளது தேமுதிகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நல்லதம்பியின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.
அண்மையில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தேமுதிக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார் விஜய பிரபாகர். முன்பு இந்தப் பதவி நல்லதம்பி வசம் இருந்தது. தனக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், அது கிடைக்காத அதிருப்தியில் நல்லதம்பி இந்த முடிவை எடுத்துள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் தேமுதிகவின் 19வது பொதுக்குழு மற்றும் தலைமைச் செயற்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற்றது.
தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில இளைஞரணி செயலாளராக விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவின் துணை செயலாளராக இருந்த எல்.கே. சுதீஷ் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
மேலும் தேமுதிக அவைத் தலைவராக வி. இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளராக ப. பார்த்தசாரதி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேமுதிக துணை செயலாளர்களாக எம்.ஆர். பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார், சுபா ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர் அணி செயலாளர் பதவி
விஜய பிரபாகரன் தேமுதிக மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. முன்பு, தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த நல்லதம்பி தான் தற்போது அதிருப்தி அடைந்து விலகல் முடிவை எடுத்துள்ளார்.
தன்னிடம் இருந்த இளைஞரணி செயலாளர் பதவி, விஜய பிரபாகரனுக்கு வழங்கப்படுவதால், தனக்கு மற்றொரு முக்கியமான பொறுப்பு வழங்கப்படும் என நல்லதம்பி எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. அதாவது, கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு கிடைக்கும் என நல்லதம்பி எதிர்பார்த்துள்ளார்.
நல்லதம்பி அதிருப்தி
ஆனால், அவருக்கு உயர்மட்டக் குழு உறுப்பினர் பதவியே வழங்கப்பட்டது. அதனால் அதிருப்தி அடைந்த அவர், பிரேமலதா விஜயகாந்த்திடமே தனது ஆதங்கத்தைக் கொட்டியதாகக் கூறப்படுகிறது. சைக்கிள் கடை வைத்திருந்த தன்னை கேப்டன் தான் எழும்பூர் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்து எம்.எல்.ஏ ஆக்கினார், கட்சியை மட்டுமே நம்பி இருக்கிறேன், என்னை ஏமாற்றி விட்டார்கள் என முக்கிய நிர்வாகிகளிடம் அவர் வேதனையுடன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேமலதாவுக்கு கடிதம்
இந்நிலையில் தான், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கடிதம் எழுதியுள்ளார் நல்லதம்பி. அந்தக் கடிதத்தில், தருமபுரியில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் நாமெல்லாம் நீண்ட நாள் எதிர்பார்த்த கேப்டன் அவர்களின் மறு உருவமும் கேப்டனின் நிழலாகவும் இருக்கின்ற அன்புத்தம்பி இளைய கேப்டன் விஜய பிரபாகரனுக்கு கழக இளைஞரணி செயலாளராக அறிவித்தமைக்கு என்னுடைய உளமார்ந்த வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
கடுமையான அப்செட்
மேலும், நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இயக்கத்திலிருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை. என்றைக்கும் நான் கழகத்தின் கடைகோடி தொண்டன் என்பதை என் உதிரத்தின் ஒவ்வொரு துளியும் சொல்லும்.
எனக்கு கழக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அப்படி விடுவிக்காத பட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்வேன். இதனை நான் எந்தவித மன வருத்தத்திலும் கூறவில்லை மன மகிழ்ச்சியோடுதான் கூறுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார் நல்லதம்பி.












Click it and Unblock the Notifications