பிரதமரிடம் இருந்து அன்புமணிக்கு வந்த அழைப்பும்... தேமுதிக கொதிப்பும்
சென்னை: பிரதமர் மோடியிடம் இருந்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இருவருக்கு நேற்று வந்த அழைப்பு இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
எதிரும் புதிருமாக இயங்கும் திமுக தலைவர் ஸ்டாலினும் பிரதமர் மோடியும் நேற்று நண்பகல் தொலைபேசியில் பேசி பரஸ்பரம் நலம் விசாரித்த நிலையில் அன்று மாலையே அன்புமணிக்கும் மோடியிடம் இருந்து அழைப்புச் சென்றது.
இந்நிலையில் பாஜகவுடன் இணக்கமாக இருந்தும் இந்த சூழலில் கூட விஜயகாந்திடம் பிரதமர் மோடி நலம் விசாரிக்காதது தேமுதிக தரப்புக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது.

மோடி அழைப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரையும் நேற்று தொலைபேசியில் அழைத்த பிரதமர் மோடி உடல் நலம் பற்றி கேட்டறிந்ததோடு, கொரோனா விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆலோசனைகளையும் கேட்டார். மேலும், வரும் 8-ம் தேதி நடக்க இருக்கும் நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் பற்றியும் உரையாடல் அமைந்திருந்தது. அதனடிப்படையில் திமுக அந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என்றும், மத்திய அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவோம் எனவும் ஸ்டாலின் கூறியிருந்தார்.

எழுத்துப்பூர்வமாக
இதனிடையே முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் அன்புமணி ராமதாஸிடமும் பிரதமர் மோடி கொரோனா விவகாரத்தில் அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி பேசியிருக்கிறார். ஐந்து எம்.பி.க்களுக்கு கீழுள்ள கட்சித் தலைவர்கள் யாருக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு மோடி அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் அன்புமணியை மட்டும் கூட்டத்திற்கு அழைத்தால் சலசலப்பு ஏற்படும் எனக் கருதிய பிரதமர் மோடி, அன்புமணியிடம் உங்கள் ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக அனுப்புங்கள் என கூறினார். மேலும், ராமதாஸை கேட்டதாக கூறுமாறு தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சி
இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஓய்வில் உள்ளதால் அவர்களை தொலைபேசி மூலம் அழைத்து நலம் விசாரிக்கும் பிரதமர், கேப்டனை நலம் விசாரிக்கவில்லையே என்ற வருத்தம் தேமுதிக தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. ஸ்டாலினையும், அன்புமணியையும் நலம் விசாரிப்பவருக்கு பாஜகவுடன் 2014-ல் முதல் கூட்டணி அமைத்த தேமுதிகவை தெரியவில்லையே என்ற அங்கலாய்ப்பு சற்று அதிகமாகவே அந்தக் கட்சி வட்டாரத்தில் தெரிகிறது.

விரக்தி
சி ஏ ஏ உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். இந்நிலையில் தாமக தலைவர் வாசனுக்கு ராஜ்யசபா சீட் கிடைத்ததன் பின்னணியில் பாஜக இருந்த விவகாரம் தேமுதிகவுக்கு பெரும் விரக்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்து வருகிறது தேமுதிக தலைமை. காரணம் விரைவில் நடைபெற இருக்கும் விஜய பிரபாகரன் திருமணத்திற்கு பிரதமர் மோடியை அழைக்க திட்டமிட்டிருப்பது தான்.












Click it and Unblock the Notifications