”எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க.. மழைநீரை அகற்றிய அரசு” ஸ்டாலினுக்கு விஜயகாந்த் பாராட்டு!
சென்னை: சென்னையில் கனமழையால் தேங்கிய தண்ணீரை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையாத இடங்களிலும், வடிகால் இல்லாத பகுதிகளிலும் ஆங்காங்கே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

விஜயகாந்த் அறிக்கை
இதனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ள நீரில் தத்தளிக்கிறது. வடிகால் பணிகள் மந்த கதியில் நடைபெறுவதால் மழைநீா் வெளியேற முடியாமல் சாலைகளில் பாய்ந்து ஓடுகிறது.

சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள்
முதல்வா் தொகுதியான கொளத்தூரில் வீடுகளில் மழை நீா் புகுந்ததால் விடிய விடிய தூங்காமல் மக்கள் தவித்துள்ளனா். சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தேங்கியுள்ள மழை நீரை அகற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மழைநீர் அகற்றம்
இந்த நிலையில் இன்று காலை சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழையால் தேங்கிய மழைநீர் வடிந்தது. வடிகால்கள் இல்லாத இடங்களில் பம்ப் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டது. இதன் காரணமாக தென் சென்னை பகுதிகளில் தேங்கிய மழைநீர் முழுவதும் ஒரே நாளில் அகற்றப்பட்டது. இதனால் மக்கள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்த் ட்வீட்
வடசென்னையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருந்தாலும் அவற்றை அகற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசை மக்கள் பாராட்டி வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றான தேமுதிக பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, சென்னையில் தேங்கிய மழை நீரை துரித நடவடிக்கை மேற்கொண்டு, ராட்சத இயந்திரங்கள் கொண்டு மழைநீரை அகற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications