Vijayakanth: தாயகம் திரும்பினாலும்.. நேரடி பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் வர வாய்ப்பில்லையாம்!
Recommended Video
-கோயா
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாயகம் திரும்பினாலும் கூட நேரடியாக களத்திற்கு வந்து பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நல உபாதைகளால் கடந்த சில ஆண்டுகளாகவே சிரமப்பட்டு வருவது ஊரறிந்த விஷயம். சிங்கப்பூரில் முதற்கட்டமாக சிகிச்சை பெற்ற விஜயகாந்த் அடுத்தடுத்த சிகிச்சைகளுக்காக அமெரிக்கா பறந்தார்.
அங்கு மனைவி பிரேமலதா மற்றும் இளைய மகன் சண்முகபாண்டியன் சகிதம் தங்கி சிகிச்சை பெற்றார். இந்நிலையில் வரும் திங்கள்கிழமை விஜயகாந்த் தமிழகம் வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது தேமுதிக தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
களப் பணி கூடாது
சிகிச்சை முடிந்து வருவதால் விஜயகாந்த் தமிழகமெங்கும் வலம் வருவார் என நிர்வாகிகள் நினைக்கும் நிலையில், உண்மை நிலவரம் வேறு மாதிரி இருக்கிறதாம். விஜயகாந்த் முழு ஓய்வில் தான் இருக்க வேண்டும், அவரை பிரச்சாரம் அது இது என அலைக்கழிக்க வைத்து விடாதீர்கள் என அவருக்கு மருத்துவம் செய்த மருத்துவர்கள் குழு கண்டிஷன் போட்டுவிட்டார்களாம்.
ரஜினி ஸ்டைலில்
மருத்துவர்களின் கண்டிஷனுக்கு உத்தரவாதம் அளித்த பிரேமலதா, விஜயகாந்தை களப்பிரச்சாரத்திற்கு அழைத்துச் செல்லாமல் ரஜினிகாந்த் பார்மெட்டில் வீட்டில் இருந்தபடியே விஜயகாந்த் வாக்கு கேட்கும் வீடியோ பதிவுகளை தினமும் வெளியிட முடிவு செய்து, அதற்கான குழுவை உருவாக்கி வருகிறாராம்.
விஜய பிரபாகரன் தான் வருவார்
மேலும் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதால், பேச்சுப்பயிற்சி, நடப்பு விவகாரங்களை விரல் நுனியில் வைத்துக்கொள்ளுதலில் தீவிர கவனம் செலுத்துகிறாராம்.
குறை தெரியாதபடி
அதேசமயம், விஜயகாந்த் களத்திற்கு நேரில் வராத குறையைத் தீர்க்கும் வகையில் தெளிவாக திட்டமிட்டு செயல்படவுள்ளதாம் தேமுதிக. அதன்படி பல்வேறு திட்டங்களை பிரேமலதா விஜயகாந்த் வகுத்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.