விஜயகாந்த் காலில் விழுந்த கருணாநிதி.. சுதீஷ் போட்ட கார்ட்டூன், தேமுதிகவினர் ஷாக்.. வேகமாக நீக்கினார்
சுதீஷ் போட்ட சர்ச்சை கார்ட்டூனை கண்டு தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்தனர்
சென்னை: சுதீஷ் பதிவிட்ட சர்ச்சைக்குரிய கார்ட்டூன் ஒன்று, ஒட்டுமொத்த தேமுதிகவினரையே அதிர்ச்சி அடைய செய்துவிட்டது.. இதையடுத்து அவசர அவசரமாக அந்த கார்டூனை தன்னுடைய பதிவில் இருந்து நீக்கி உள்ளார் சுதீஷ்!
கடந்த ஒரு வாரமாகவே அதாவது விஜயகாந்த் பிறந்த நாளில் இருந்தே தேமுதிக சம்பந்தமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது பிரேமலதா விஜயகாந்த்தான்.
"வரும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது... அதிமுக, திமுக இல்லாத மாற்று அரசியல் தமிழகத்தில் வர வேண்டும் என மக்கள் ஆசைப்படுகிறார்கள்.. கருணாநிதி, ஜெயலலிதா என்ற 2 பெரிய ஆளுமைகள் இல்லாததால், வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது" என்று கூறியிருந்தார் பிரேமலதா விஜயகாந்த்.
சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞர் தற்கொலை.. இறப்பதற்கு முன்னர் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீஸ்!
அதிர்ச்சி
இதையடுத்து அரசியல் களத்திலும், அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் விவாதங்கள் கிளம்பி விட்டன. அதேசமயம், மக்கள் மத்தியில் பிரேமலதாவின் இந்த பேச்சு மிகப்பெரிய அதிர்ச்சியாக பார்க்கப்படவில்லை என்பதே உண்மை.. காரணம், ஒவ்வொரு தேர்தலின்போதும் கூட்டணிக்கு முன்பாக வழக்கமாக பல கட்சிகளிடம் பேச்சு நடத்த, அதிக சீட்களைப் பெற போடப்படும் கொக்கிதான் இது என்பது அனைவரும் அறிந்ததே.
தேமுதிக
தேமுதிக என்றில்லை.. பல கட்சிகளும் கூட இதே பாணியைத்தான் பொதுவாக அரசியலில் கடைப்பிடிக்கின்றன. அப்போதுதான் தங்களுக்கு டிமாண்ட் கூடும் என்பது இவர்களின் எண்ணம். ஆனால், இந்த முறை தேமுதிக யாருடன் கூட்டணி என்பது தான் உறுதியாக தெரியவில்லை. இது ஒன்றுதான் சந்தேகமே தவிர, பிரேமலதா பேசியது சலசலப்போ, அதிர்ச்சியோ, பரபரப்பான விஷயமோ கிடையாது.
முரசு
இந்நிலையில், ஒரு பிரபல நாளிதழ் ஒரு கார்டூன் வெளியிட்டிருந்தது.. அதில் "மாபெரும் ஏலம் 2012-க்கான ஏலம் ஸ்டார்ட்" என்ற தலைப்பு இருந்தது.. அந்த கார்டூனில், தேமுதிக சின்னமான முரசு-வில் விஜயகாந்த்தை உட்கார வைத்துள்ளனர்.. அவர் கைகளை கட்டிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்துள்ளார். அவரை பிரேமலதா ஏலத்தில் விட போவதாக அறிவிப்பது போல, பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
ஏலம்
அவரது ஒரு கையில் மணி உள்ளது, மற்றொரு கையில் விரலை உயர்த்தி ஏலத்தை அறிவிக்கிறார்.. விஜயகாந்த், பிரேமலதா முன்பு 2 கட்சிகள் ஏலம் எடுப்பது போல நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. அதில், இரட்டை இலை, உதயசூரியன் சின்னம் வரையப்பட்டிருந்தது. இது தேமுதிவினர் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
விஜயகாந்த்
இந்த கார்டூனுக்கு பதிலடியாக சுதீஷ் ஒரு கார்ட்டூன் வெளியிட்டார்.. அதில், எல்லா கட்சிக்காரர்களும் வட்டமாக சூழ்ந்து, நடுவில் விஜயகாந்த்தை நிற்க வைத்து, அவரது காலில் விழுந்து கிடக்கிறார்கள். இதில் மறைந்த தலைவர் கருணாநிதியும் விஜயகாந்த் காலில் விழுவது போல உள்ளது.. அவருக்கு பக்கத்தில் கருப்பு கலர் சட்டை தெரிகிறது.. அது திக தலைவர் வீரமணி போலும்.
அதிர்ச்சி
இந்த 2 கார்ட்டூனுமே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.. ஆனால், இந்த கார்ட்டூனைவிட சுதீஷ் போட்டிருந்த கார்ட்டூன்தான் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.. தேமுதிக என்ற கட்சி பற்றி அவரது சொந்த மதிப்பீடு என்ன என்பது தெரியவில்லை.. இவர்கள் யாருடனும் கூட்டணியே வைக்கவில்லையா? கூட்டணியே கிடையாது என்று சொல்லப் போய்த்தான் விஜயகாந்த்தை மக்கள் ஆதரித்தார்கள், நம்பி வந்தார்கள். அதே விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த பிறகுதானே, தேமுதிக மீதான மக்களின் நம்பிக்கை சரிந்து போனது. இதை இன்னும் தேமுதிக தலைமை உணரவில்லையா?
வைகோ
வைகோ தலைமையில் 3வது அணி உருவாவதற்கு முன்பு தேமுதிகவின் அனைத்து வேலைகளையும் தமிழக மக்கள் கண்கூடாகவே கண்டனர்.. மக்கள் பார்க்கப் பார்க்கத்தானே எல்லா காரியங்களையும் தேமுதிக செய்தது. அவ்வளவுகூட வேண்டாம்.. நடந்து முடிந்த எம்பி தேர்தலின்போது, அதிமுக, திமுக என்ற 2 கட்சிகளுடன் ஒரே சமயத்தில் மாறி மாறி, கூட்டணி பேரம் நடந்ததையும் நாடறியும்.. இதற்கு முக்கிய காரணகர்த்தாவே சாட்சாத் சுதீஷ்தான்.. விஜயகாந்த் அரும்பாடு பட்டு சேர்த்து வைத்த மொத்த பேரையும் அந்த சமயத்தில் காற்றில் பறக்க விட்டது தேமுதிக.
கார்ட்டூன்
எனவே, இதில் ஒளிவுமறைவே இல்லை. இன்னொன்று அரசியல் கட்சிகளுக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம். மக்களும் இதுமாதிரி காரியங்களையெல்லாம் பார்த்து சகித்துக் கொள்ளப் பழகி விட்டார்கள். இந்த நிலையில்தான் இப்போது ஒரு நாளிதழ் போட்ட கார்ட்டூனுக்குப் பதில் கார்ட்டூன் போட்டு தேமுதிகவினரையே அதிர வைத்துள்ளார் சுதீஷ.
அநாகரீகம்
கருணாநிதி மறைந்து விட்ட தலைவர். வழக்கமாக, மறைந்து போனவர்களை விமர்சிப்பது அநாகரீகம் என்று சொல்வார்கள். அந்த அடிப்படையிலாவது இந்த கார்ட்டூனை எடுத்து மேற்கோள் காட்டாமல் இருந்திருக்கலாம் சுதீஷ். மாறாக அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து போட்டு தேமுதிகவின் பெயருக்குத்தான் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் சுதீஷ். இந்த கார்ட்டூனும் கூட முன்பு அதே நாளிதழ் போட்ட கார்ட்டூன்தானாம். இப்போது தனது முகநூல் பதிவிலிருந்து இந்த பதிவை எடுத்து விட்டார் சுதீஷ். என்ன இருந்தாலும் போட்டது போட்டதுதானே.. பெயர் கெட்டது கெட்டதுதானே.
மன்னிக்க முடியாது
தன் சகோதரியை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதற்காக, சுதீஷ் பதிலடி தருவது சரியானதுதான்.. அது நியாயமானதும் கூட.. அதற்காக கருணாநிதி, மூத்த தலைவர் வீரமணி போன்றோரை இழிவுபடுத்தியதை ஏற்கவும் முடியாது.. மன்னிக்கவும் முடியாது.. இப்படி ஒரு அரசியல் நடத்தினால், தேமுதிக என்ற கட்சி மக்கள் மனதிலிருந்து இன்னும் விலகி போகத்தான் செய்யும்.