திமுகவில் இணைந்த தேமுதிக மாவட்டச் செயலாளர்.. நிர்வாகிகள் விலகுவதால் கட்சி மேலிடம் கடும் அதிர்ச்சி..!
சென்னை: தேமுதிக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகோபால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
மாவட்டச் செயலாளர் ஒருவர் கட்சியை விட்டு விலகியிருப்பது தேமுதிக தலைமைக்கு கடும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
தேமுதிகவில் மாவட்டச் செயலாளராக இருந்த கிருஷ்ணகோபாலுடன், மணப்பாறை, மருங்காபுரி ஒன்றியங்களை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்திருக்கின்றனர்.

திருச்சி மாவட்டம்
தேமுதிக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகோபாலை வக்கீல் கிருஷ்ணகோபால் என்று அழைத்தால் தான் மாவட்டத்தில் அனைவருக்கும் தெரியும். ஆரம்பக்காலத்தில் திமுகவில் இருந்த இவர், விஜயகாந்த் கட்சி தொடங்கியவுடன் அதில் இணைந்து மணப்பாறை நகரச் செயலாளரானார். தனது சுறுசுறுப்பான பணியின் காரணமாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கிருஷ்ணகோபால் என பெயர் சொல்லி அழைக்கும் வகையில் கட்சி மேலிடத்தில் தனது இமேஜை உயர்த்திக்கொண்டார்.

தொடர் தோல்வி
இதையடுத்து தேமுதிக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். தேர்தலில் தோல்வி உறுதி என்பதை அறிந்தும் பல லட்ச ரூபாய் சொந்த நிதியை கரைத்தார். இதுமட்டுமல்லாமல் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போதும் தேமுதிக வேட்பாளர்களுக்காக பல லகரங்களை காலி செய்தார். இதனால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிட்ட அவரை, இனியும் தேமுதிகவில் தொடர்ந்து பயனில்லை என அவரது ஆதரவாளர்கள் அட்வைஸ் செய்யத் தொடங்கினர்.

வரவேற்பு
மீண்டும் தாய்கழகமான திமுகவிலேயே இணைவது என முடிவெடுத்த அவர், அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அவரும் வரவேற்றதால், தனது ஆதரவு நிர்வாகிகள் பலருடன் நேற்று சென்னைக்கு சென்று, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

கட்சி மேலிடம்
அவருடன் தேமுதிக மாநில மாணவர் அணிச் செயலாளர் விஜயகுமார், மருங்காபுரி ஒன்றியச் செயலாளர் சரவணன் என்ற பொன்னையா, திருச்சி மலைக்கோட்டை பகுதிச்செயலாளர் நூர் முகமது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்திருக்கிறார்கள். இதன் மூலம் திருச்சி தெற்கு மாவட்டத்தில் தேமுதிக கலகலத்து போயுள்ளது. கட்சியிலிருந்து விலக வேண்டாம் என வக்கீல் கிருஷ்ணகோபாலிடம் தேமுதிக மேலிடம் சமாதானம் செய்தும் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

முக்கியப் பதவி
இதனிடையே எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மணப்பாறை நகர்மன்ற தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவி வக்கீல் கிருஷ்ணகோபாலுக்கு கொடுக்கப்படும் என திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பேரிலேயே அவர் தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருப்பதாகவும் காரணத் தகவல் உலா வருகிறது.












Click it and Unblock the Notifications