50 சதவீத இடம் கூட கேட்போம்.. லோக்சபா தேர்தல் மாதிரி விட்டுவிட மாட்டோம்.. பிரேமலதா அதிரடி பேட்டி
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் விட்டுவிட்டோம், உள்ளாட்சி தேர்தலில் விட மாட்டோம் என்று, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாக தெரிவித்தார்.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதன்பிறகு நிருபர்களிடம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில் அதிரடியாக சில கருத்துக்களை முன் வைத்தார்.
வரும் உள்ளாட்சி தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தியுள்ளோம் என்று கூறிய பிரேமலதா அதன்பிறகு சொன்னவை சரவெடி கருத்துக்கள்.

பணம் செலவு
கட்சிக்கு விசுவாசமாக இருப்போர், பணம் செலவு பண்ண திறமையுள்ளோர் போன்ற தகுதிகள் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய மாவட்ட செயலாளர்களை கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்களும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை துவங்குவதாக கூறியுள்ளனர்.

50 சதவீதம்
இவ்வாறு பிரேமலதா கூறியபோது, நிருபர் ஒருவர், நீங்கள் எத்தனை இடங்களை அதிமுக கூட்டணியில் கேட்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரேமலதா, "நாங்கள் 50 சதவீதம் கூட கேட்போம்.. ஆனால் கூட்டணி என்று வரும்போது, பல கட்சிகள் ஒன்று சேரும். அப்போது யாருக்கு எந்த இடம் என்பதை உட்கார்ந்து பேசுவோம். அதற்காக குழு அமைத்துள்ளோம்." என்றார்.

விடமாட்டோம்
கடந்த முறை 7 லோக்சபா தொகுதிகளை கேட்டோம், ஆனால் கிடைத்தது 4. ஆனால் பாமக முதலிலேயே போய் 7 தொகுதிகளை வாங்கினர். நாங்கள் கடைசியாக வந்ததால், எண்ணிக்கை குறைவாக இருந்தது. எனவே கூட்டணி தர்மத்திற்காக 4 தொகுதியை விஜயகாந்த் ஒப்புக்கொண்டார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக விரும்பும் சதவீதத்தை கேட்டுப்பெறுவோம். அதை முதல்வரும் ஏற்பார்.

விஜயகாந்த் பலம்
எங்கள் கட்சி பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். விக்கிரவாண்டி தொகுதிக்கு ஒரே ஒரு பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் வந்தார். அதன் பலன் என்ன என்பதை மாநிலமே பார்த்துள்ளது. எனவே எங்கள் பலத்தை முதல்வரும், அதிமுகவும் அறிந்தே உள்ளார்கள்.

பாமகவுடன் மோதல் இல்லை
திருவள்ளுவர் விவகாரத்தில் எச்.ராஜா கருத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது. பாமகவுடன் மோதல் கிடையாது. விக்கிரவாண்டியில் ஏதோ 2 பேர் நடுவே நடந்த மோதலை மீடியாக்கள் பெரிதாக பேசியுள்ளனர். எதிர்க்கட்சிகளில் எத்தனையோ குழப்பங்கள் உள்ளன. அதை மீடியாக்கள் காட்டுவது இல்லை. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications