புதிய உற்சாகத்தில் தேமுதிக செயற்குழு! விஜயகாந்த் பங்கேற்பார் என அறிவிப்பு! தொண்டர்கள் மகிழ்ச்சி
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், வரும் 14ம் தேதி புதிய உற்சாகத்துடன் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் புதிய அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீப ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் உடல்நிலை மேலும் மோசமானது. எனவே பொது நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில், திடீரென சளி தொற்று ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் 18ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு துறையை சேர்ந்த மருத்துவர்களும் சிகிச்சையளித்தனர். இதற்கிடையில் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் சோஷியல் மீடியாக்களில் பரவின. இதனையடுத்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா, விஜயகாந்த்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இத தொடர்பாக மருத்துவமனை சார்பில், “சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்” என்று அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது.
அதாவது, தேமுதிக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வருகிற டிச. 14 ஆம் தேதி காலை 8.45 மணிக்கு சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மேலும் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், “இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு செயலாளர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள். ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், புதுச்சேரி, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், தில்லி, அந்தமான் ஆகிய மாநில செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், புதிய உற்சாகத்துடன் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications