கெத்தாக ஆரம்பித்து.. முறுக்கு காட்டி நெருக்கடி கொடுத்து.. கடைசியில் பணிந்து போன தேமுதிக!
தேமுதிகவின் பலவீனமே இத்தனை இழுபறிக்கும் காரணமாக இருக்கிறது.
சென்னை: தேமுதிகவில் 20 நாளாக ஒரே இழுபறிதான்.. இப்படி ஒரு கூட்டணிக்காக நடந்த பேரத்தையும், பேச்சுவார்த்தையையும் தமிழகம் இதுவரை பார்த்திருக்காது!
கூட்டணி தொடர்பாக இந்த முறை விஜயகாந்த் முழுமையான அளவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்கிறார்கள். அங்கேயே முதல் சிக்கல் வந்து விட்டது. பிரேமலதா விஜயகாந்த்தும், அவரது தம்பி சுதீஷும்தான் கூட்டணி தொடர்பான விவகாரங்களை முழுமையாக கையாண்டதாக சொல்கிறார்கள். இங்குதான் 2வது சிக்கல் வந்தது.
விஜயகாந்த் அமெரிக்காவில் இருக்கும்போதே, சீட் விஷயங்களை பிரேமலதாவும், சுதீஷூம் டெல்லி மேலிடத்திடம் மெதுவாக பேச ஆரம்பித்தார்கள். அதுபோலதான் அதிமுகவிலும். ஆனால் அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை "விஜயகாந்த் வரட்டும்" என்றதுதான்!
அதிமுகவுக்கு 21.. அதில் ஒன்று தமாகாவுக்கு போகலாம்.. கூட்டணிக் கட்சிகளுக்கு 19!
கடுப்பான தேமுதிக
விஜயகாந்தும் வந்தும் தேர்தல் களம் சூடானது. தேமுதிகவைப் பற்றி அறிந்து வைத்துள்ள அதிமுக, அதிரடியாக எடுத்த எடுப்பிலேயே பாமகவுக்கு 7 +1 என்று ஒதுக்கி தேமுதிகவை அதிர வைத்தது. இதை தேமுதிக எதிர்பார்க்கவில்லை. எப்போது பாமக அதிமுகவுடன் இணைந்து விட்டதோ அப்போதே "மெகா கூட்டணி" என்ற பேச்சு அடிபட ஆரம்பித்துவிட்டது. இது தேமுதிக தரப்புக்கு கூடுதல் கடுப்பை தந்துவிட்டது.
செல்வாக்கு
"பாமகவை போலவே எங்களுக்கும் 7 வேண்டும், நாங்கள் ஒரு காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், எங்களுக்கும் வட மாவட்டத்தில் செல்வாக்கு உள்ளது" என்றெல்லாம் தேமுதிக சொல்லி பார்த்தும் அதை அதிமுக காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை, கண்டு கொள்ளவும் இல்லை. தைலாபுரம் விருந்து, மற்ற கூட்டணி தொகுதி விவகாரங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டது.
பாஜக தீவிரம்
இந்த இடைபட்ட நேரத்தில்தான் உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு போன தேமுதிக, திமுக உள்ளிட்டவைகளுடன் பேச்சு நடத்தியது. இதை பார்த்து பதறிப் போன பாஜக, எப்படியாவது விஜயகாந்தை கூட்டணிக்கு கொண்டு வாருங்கள், இல்லையென்றால் வாக்குகள் சிதறும், திமுக வெற்றி பெற்றுவிடும் என்று அதிமுகவை எச்சரித்தனர்.
தனித்துவிடப்பட்டது
இதன்பிறகுதான் விஜயகாந்த் விஷயத்தில் அதிமுக அக்கறை காட்டியது. ஆனாலும், "விஜயகாந்த் வந்தால் சந்தோஷம்.. வரவில்லை என்றால் நல்லது" என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்ல ஆரம்பித்துவிட்டார். மறுபக்கம் தேமுதிகவின் பேரத்தைப் பார்த்து அதிர்ந்து போன திமுக, கதவைச் சாத்தி விட்டு போய் விட்டது. இதனால் தேமுதிக தனித்து விடப்படும் அபாயம் உருவானது. இதை தேமுதிக எதிர்பார்க்கவில்லை.
கூட்டணி வேணாம்
இன்றுகூட தேமுதிக தரப்பில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், "கூட்டணியே வேணாம்.. தனியாக நிற்கலாம்" என்று நிர்வாகிகள் சொன்னார்களாம். ஆனாலும் பாஜகவின் கட்டாயத்தாலும், நெருக்குதலாலும் அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக முன்வந்தது. மேலும் அதிமுக தரும் 4 தொகுதிகளை ஏற்கவும் ஓகே சொல்லி விட்டதாம்.
சின்னம் என்னாகும்?
ஒதுக்கப்பட்ட இந்த 4 தொகுதிகளில் 2 தனித் தொகுதிகள் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே இதனை மனப்பூர்வமாக ஏற்க தேமுதிக முன்வருமா என தெரியவில்லை. அதேபோல சின்னம் நிலைமை பற்றி இன்னும் யாரும் பேசவில்லை. முரசுதான் கிடைக்குமா? அல்லது இரட்டை இலையா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்பார்கள். அது தேமுதிகவுக்கு 200 சதவீதம் பொருந்தும்.