கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் நடந்த திரைமறைவு அரசியல் பேச்சுவார்த்தைகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகி உள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதை தடுக்க திமுகவும் அதிமுகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயன்றதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. உண்மையில் அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடந்தது உண்மை தான் எனும் அரசியல் பார்வையாளர்கள், அதற்கான சில காரணங்களையும் அடுக்குகின்றனர்.
2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய், முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கினார். 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்றாலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, தமிழக அரசியலில் எதிர்பாராத அரசியல் நகர்வுகள் நடந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக மே 4 முதல் மே 8 வரை நடைபெற்ற சில ரகசிய ஆலோசனைகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து தகவல்கள் கசிந்தன.
தவெக
அதில் முக்கியமாக, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரெதிர் அரசியல் துருவங்களாக இருந்து வந்த திமுகவும் அதிமுகவும், தவெக ஆட்சியை தடுக்க ஒன்றாக செயல்பட முயன்றதாக கூறப்படுவது பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. தேர்தல் பிரசார காலத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும், தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரே கூட்டணியில் ஒன்றிணைய முயன்றார்களா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
திமுக - அதிமுக
முதலில் இந்த தகவல்கள் அரசியல் வதந்திகளாகவே பார்க்கப்பட்டன. ஆனால் பின்னர் அதிமுக அதிருப்தி அணியின் முக்கிய தலைவரான சி.வி.சண்முகம், "திமுக - அதிமுக இடையே கூட்டணி ஆட்சி குறித்து பேச்சுவார்த்தை நடந்தது" என்று வெளிப்படையாக பேசியது பரபரப்பை அதிகரித்தது. அதன்பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீனும் இதேபோன்ற கருத்தை தெரிவித்தார். இதனால், இந்த விவகாரம் மீண்டும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக அரசியல்
அதே நேரத்தில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை திமுக தரப்போ அல்லது அதிமுக தரப்போ நேரடி மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதும் அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசியல் பார்வையாளர்கள் கூறுவதாவது, "தவெக உருவாக்கிய புதிய அரசியல் அலை தான் இந்த பின்னணி நகர்வுகளுக்குக் காரணம்" என்பதாகும். பல ஆண்டுகளாக தமிழக அரசியலை மாற்றி மாற்றி ஆட்சி செய்த இரண்டு பெரிய கட்சிகளுக்கும், புதிய கட்சியான தவெக திடீரென மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ், விசிக
குறிப்பாக, தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் தவெக ஆட்சி அமைக்க முடியாமல் போனால், மாற்று அரசியல் கூட்டணிக்கான வாய்ப்பை பயன்படுத்தலாம் என்ற கணக்கில் சில ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகியவை வெளிப்படையாக விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு அறிவித்ததால், அந்த முயற்சி தடைபட்டதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியல்
இதற்கிடையே தற்போது மாநில அரசின் வெள்ளை அறிக்கை குறித்த பேச்சுகளும் அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளன. குறிப்பாக முந்தைய ஆட்சிகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவரங்கள் வெளியாகலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இதனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் நடந்த திரைமறைவு பேச்சுவார்த்தைகள் மீண்டும் பேசுபொருளாகி உள்ளன. எதிர்காலத்தில் இதுகுறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications