4 தொகுதி இடைத் தேர்தல்.. 2 நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்கிறது திமுக
சென்னை: 4 தொகுதி சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை 2 நாட்களில் திமுக அறிவிக்கும் என்று தெரிய வருகிறது.
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளதால் திமுகவில் வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தாலும் வேட்பாளர்களை ஸ்டாலின் தேர்வு செய்துவிட்டதாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர். திருப்பரங்குன்றத்தில் கடந்த முறை போட்டியிட்ட டாக்டர் சரவணன் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். சேடப்படி முத்தையா மகனும், மாவட்டச்செயலாளருமான மணிமாறனும் போட்டியிட விரும்புகிறார்.
மதிமுகவில் இருந்து வந்தவர் டாக்டர் சரவணன். வைகோவோடு ஸ்டாலின் இணக்கமாக உள்ள நிலையில் சரவணனுக்கு சீட் கொடுத்து வைகோவின் வருத்தத்தை சம்பாதிக்க வேண்டாம் என்பது மதுரை உ.பி.க்கள் தலைமைக்கு வைக்கும் கோரிக்கை.
அரவக்குறிச்சியைப் பொறுத்தவரை செந்தில்பாலாஜி தான் அதில் துளி அளவும் மாற்றமில்லை. சூலுர் தொகுதியில் போட்டியிட சன்.ராஜேந்திரன், தளபதி முருகேசன் போன்றோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்களாம். ஆனால் ஸ்டாலினோ பொங்கலூர் பழனிசாமியை களமிறக்கி விடலாம் என நினைக்கிறாராம்.
ஏனென்றால் வாழ்வா சாவா என்ற தேர்தலில், அறிமுகம் இல்லாத வேட்பாளரை போட்டு அவர்கள் கோட்டைவிட்டு விடக்கூடாது என எண்ணுகிறாராம் ஸ்டாலின். பொங்கலூர் பழனிசாமியை பொறுத்தவரை செலவு செய்ய பணத்திற்கு குறையில்லை, சூலுர் பகுதியில் நன்கு அறிமுகமானவரும் கூட என்கின்றனர் லோக்கல் உ.பி.க்கள். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைக்குள் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications