ஸ்டாலின் நேரடியாக கேட்டுக்கொண்டார்.. சிபிஐ 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது.. வீரபாண்டியன் விளக்கம்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கேட்டுக் கொண்டதால், சிபிஐ கட்சி தொகுதி எண்ணிக்கையை குறைத்து கொள்ள சம்மதித்ததாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் விளக்கம் கொடுத்துள்ளார். பாஜகவை வீழ்த்துவதே ஒரே இலக்கு என்று கூறிய வீரபாண்டியன், 4 கட்ட பேச்சுவார்த்தையிலும் எங்களுக்கு திமுக அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்கள் இருக்கும் சூழலில், திமுக தலைமையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஐயூஎம்எல், மமக, மதிமுக, காங்கிரஸ், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்த சூழலில், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திமுக - சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு இடையில் இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் சிபிஐ கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் சிபிஐ கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட சூழலில், இம்முறை ஒரு தொகுதியை குறைத்திருக்கிறது.
இதன்பின் அண்ணா அறிவாலயத்தில் சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இது சாதாரணமாக வந்து போகிற தேர்தல் அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். பாஜக ஒரு பதற்ற அரசியலை சுமந்து வருகிறது. அமைதியான தமிழ் மண்ணை சீர்குலைக்க முயற்சிக்கிறது. அதனால் இம்முறை சிபிஐ கட்சியின் முதன்மை இலக்கு பாஜகவை வீழ்த்துவது தான்.
சிபிஐ ஒரு நூற்றாண்டு கால கட்சி.. தேர்தல் வெற்றி, தோல்வியை கடந்து நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்காக போராடி வந்துள்ளது. உழைக்கும் மக்களின் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும். அதற்காக தான் கூட்டணி அமைக்கிறோம். திமுகவுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். கடந்த முறையை விடவும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரினோம்.
இறுதியாக முதல்வர் ஸ்டாலின், கூட்டணியில் கூடுதலாக கட்சிகள் இணைந்திருப்பதால் நாங்கள் உட்பட பலரும் தொகுதிகளை குறைத்து கொள்கிறோம்.. எனவே நீங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனால் 6 தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் நிறைவாக 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
5 இடங்கள் என்பது கட்சி நிர்வாகிகளை சோர்வடைய செய்யலாம். ஆனால் இதனை கடந்து எங்களுக்கு ஒரு அரசியல் இருக்கிறது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. அதற்காகவே அணி சேர்ந்திருக்கிறோம்.. திமுக எங்களை ஒருபோதும் நிர்பந்திக்கவில்லை.. ஒவ்வொரு முறையும் வேண்டுகோள் தான் வைத்தனர். பரிசீலனை செய்ய வேண்டும் என்றுதான் ஸ்டாலினும் கேட்டு கொண்டார்.
திமுகவினரிடம் ஜனநாயகன் இருக்கிறது. சுயமரியாதை பாதிக்கப்பட்டிருந்தால், சிபிஐ அங்கிருந்து வெளியேறி இருக்கும். ஆனால் திமுக ஒவ்வொரு முறையும் கட்டளையிடுகிற வகையில் பேசவில்லை. சிபிஐ கட்சியை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கூடுதலாக போட்டியிட வேண்டும் என்று நினைத்தோம். முதல்வர் ஸ்டாலின் சூழலை விளக்கி எங்களிடம் பரிசீலனை செய்ய கூறியதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications