இப்போ வந்த தேமுதிகவுக்கு அதிக சீட்டா.. எங்களுக்கு இப்படி சொல்ல கூடாது.. திமுக கூட்டணிக்குள் சர்ச்சை!
சென்னை: திமுகவால் காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கொடுக்க முடியும் போது, எங்களுக்கு கொடுக்க முடியாது என சொல்வது நியாயம் அல்ல என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிபிஐ மற்றும் சிபிஎம் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ், மதிமுக, கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன் தொங்கு பங்கீடு பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இருப்பினும் தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடியவடையவில்லை.

இதனிடையே சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளிடம் தொகுதியை குறைத்து கொள்ள வேண்டும் என்று திமுக பேச்சுவார்த்தை குழு கூறி வருகிறது. கடந்த தேர்தலில் இரு கட்சிகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2ல் வென்றன. இம்முறை கூடுதலாக கட்சிகள் இணைந்திருப்பதால், காங்கிரஸ் தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை குறைக்க பேசி வருகின்றன.
அதன்படி சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிகவுக்கு கூடுதலாக சில தொகுதிகளை ஒதுக்க திமுக தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கொந்தளித்துள்ளார்.
அதில் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிகவிற்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக கேள்விப்பட்டோம். தேமுதிகவிற்கு அதிக தொகுதிகள் ஒதுக்கிவிட்டு, எம்ங்களுக்கு தொகுதிகளை குறைப்பதில் எந்த நியாயமும் இல்லை. சட்டசபைத் தேர்தலில் எங்களின் பலத்திற்கு ஏற்ப திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் தேவை.
மதவாத சக்திகளை விரட்டுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு எங்கள் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளும் முக்கியம். காங்கிரஸ் மற்றும் தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் போது, எங்களுக்கும் அதிக தொகுதிகள் வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் திமுக கூட்டணிக்குள் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications