திமுக இளைஞரணிக்கு 40 தொகுதிகள்? உதயநிதிக்கு சிக்னல் கொடுத்த திமுக தலைமை.. கடைசியில் ஒரு ட்விஸ்ட்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களில் 40 பேர் இளைஞரணியில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தலைமை ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலினும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இணக்கமாக செயல்பட்டு இருந்து வரும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி உருவாகிவிட்டது. இந்தக் கூட்டணியில் எந்தந்த கட்சிகள் இணையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பாமக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். அதற்கான பணிகளை பாஜகவும் செய்து வருகிறது. அதிமுகவின் 2ஆம் கட்டத் தலைவர்கள் நேரடியாகவே விஜய்க்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இதனிடையே திமுக தரப்பில் பல்வேறு கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஐபேக் மற்றும் பென் நிறுவனம் தரப்பில் ஒவ்வொரு 20 நாட்களுக்கும் ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களில் 40 பேருக்கு இளைஞரணியில் இருந்து தேர்வு செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
தவெகவில் இளைஞர்கள் அதிகளவில் இணைந்து வரும் சூழலில், அண்மையில் அக்கட்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டது. இதனால் இளைஞரணியில் இருந்து போட்டியிடும் 40 பேரையும் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக திமுகவில் எம்எல்ஏ சீட் கேட்டு உதயநிதி ஸ்டாலின் பின் பலரும் அதிகளவில் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திமுகவில் இளைஞரணி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. தற்போது தேர்தலிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதால், இது அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்து கொடுத்த பட்டியலில் இருந்து இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகிகளில் யாருக்கு சீட் கொடுப்பது என்பதை திமுக தலைமையே முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. திறமையானவர்கள், கட்சிக்கு உழைத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வைத்து இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications