ஸ்டாலினை சந்தித்த திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் – சென்னையில் முக்கிய ஆலோசனை
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ளன. இப்போதே அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. மருத்துவமனையில் இருந்து திரும்பியவுடனே முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பாக இயங்க தொடங்கிவிட்டார். கடந்த வாரம் சில முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சந்திப்புகள் நடைபெற்றன. இந்நிலையில் சிபிஎம், சிபிஐ, விசிக கட்சி தலைவர்கள் ஸ்டாலினை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2026 ஆம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே தயாராகி வருகின்றன. திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டன. இதுதவிர பாமக, தேமுதிக, நாம் தமிழர், தவெக கட்சிகளும் தேர்தலில் களம் காண்கின்றன.

அரசியல் சந்திப்புகள்
திமுக தரப்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோரும் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளனர்.
திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மமக, கொமதேக, தவாக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கடந்த வாரம் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், தேமுதிக பிரேமலதா முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
தேர்தல் கூட்டணி
மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசி நலம் விசாரித்தார். இந்த சந்திப்புகள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதல்வரிடம் அரசியல் நாகரீகம் அடிப்படையில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதேபோல அதிமுக - பாஜக கூட்டணியம், தங்கள் கூட்டணியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தலில் கூட்டணி பலம் மற்றும் வியூகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்
இந்நிலையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை இன்று திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்தனர்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றுவது மற்றும் தேர்தல் குறித்து பல முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த சந்திப்பும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications