'தமிழக பந்த்'? நிதி மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக அதிரடி ஸ்கெட்ச்- திமுக கூட்டணி பரபர ஆலோசனை
சென்னை: தமிழ்நாட்டுக்கான பல்வேறு துறைசார்ந்த நிதிகளை ஒதுக்கீடு செய்யாமல் நிலுவையில் வைத்திருக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தமிழகம் தழுவிய பந்த் போராட்டத்தை நடத்துவது தொடர்பாக திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாஜகவின் கூட்டணியில் இருக்கும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் கூட தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

வேல்முருகன் கடும் எச்சரிக்கை
மேலும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னையில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், திமுகவின் இளைஞரணிச் செயலாளராக இதில் பங்கேற்கிறேன் என்றார். மேலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் பேசுகையில், சுங்க சாவடியில் தொடங்கி வரி கொடா இயக்கம் நடத்துவோம்; நெய்வேலி அனல் மின்நிலையத்தின் கேட்டை இழுத்து பூட்டுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக பந்த் போராட்டத்துக்கு அழைப்பு
அதேபோல இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாள பெ.சண்முகம், மத்திய அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழகமே திரண்டு நிற்கிறது என்பதை வெளிப்படுத்தக் கூடிய வகையில் ஒரு முழுமையான பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுக முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை
இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். இந்த விவாதங்களில், வரி கொடா இயக்கம் நடத்துவது மற்றும் பொது வேலை நிறுத்தம்- தமிழக பந்த் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.
வரி கொடா இயக்கம்? தமிழக பந்த்?
அதாவது மத்திய அரசுக்கு எதிராக வரி செலுத்த மறுப்பு இயக்கம் நடத்துவோம் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்துகிறார்; திமுக கூட்டணியில் உள்ள வேல்முருகனும் வரி கொடா இயக்கம் நடத்துவோம் என்கிறார். இதனை அடுத்த கட்ட நடவடிக்கையாக வைத்துக் கொண்டு முதல் கட்டமாக மாநிலம் தழுவிய- தமிழக பந்த் போராட்டத்தை நடத்துவோம் என விவாதிக்கின்றனராம். அதேநேரத்தில் பந்த் போராட்டம் நடத்தினால் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் மூலம் எத்தகைய நெருக்கடி வரும்? அதனை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications