9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்... கூட்டணி கட்சிகளை அடியோடு புறக்கணிக்கிறதா திமுக?
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு எந்த இடத்தையும் ஒதுக்க முன்வராமல் அடியோடு திமுக புறக்கணிப்பதாக அதன் கூட்டணிக் கட்சிகள் குமுறிக் கொண்டிருக்கின்றன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கிவிட்டது.
சமையலுக்கு 3 குழுக்கள்.. 2 நாட்களாக அணையாத அடுப்பு.. உறவினர்களால் உள்ளம் குளிர்ந்த டிடிவி தினகரன்..!
சட்டசபை, லோக்சபா தேர்தல்களைப் போல அல்லாமல் அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன் கூட்டணி கட்சியினர் கலந்து பேசி இடங்களைப் பகிர்ந்து கொள்வது என திமுக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
துரைமுருகன் அட்வைஸ்
அந்த அறிக்கையில் நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன், உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கலந்துபேசி, சுமூக முடிவு செய்திட வேண்டுமென மாவட்ட செயலர்கள், பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அறிவுறுத்தி இருந்தார்.
கோபத்தில் விசிக
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இந்த 9 மாவட்டங்களில் சில இடங்களிலாவது போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விருப்பம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தியது. காஞ்சிபுரம் மாவட்ட திமுகவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு இடம்கூட தர முடியாது என கைவிரித்துவிட்டதாம் திமுக மாவட்ட நிர்வாகம். இது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இப்படியே ஒவ்வொரு மாவட்டமும் கை விரித்தால் வேறுவழியே இல்லாமல் திமுகவினரை எதிர்த்துதான் போட்டியிட வேண்டியது வரும் என கட்சித் தலைமைக்கு விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் கறாராக தெரிவித்துவிட்டனராம்.
சமாதானமாகுமா காங்கிரஸ்?
அதேபோல காங்கிரஸ் கட்சியும் எப்படியாவது சில இடங்களைப் பெற்றுவிடுவதற்கு முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி கேட்கும் இடங்களை எல்லாம் திமுக மாவட்ட நிர்வாகங்கள் தரப்போவது இல்லை. அதனால் கிடைத்தவரை போதும் என காங்கிரஸ் திருப்தி அடையுமா? அல்லது சட்டசபை தேர்தலிலும் இப்படி... உள்ளாட்சித் தேர்தலிலும் இப்படியா என கொந்தளிப்பைக் காட்டுமா என்பதும் தெரியவில்லை.
இடதுசாரிகள், மதிமுக
இதேநிலையில்தான் இடதுசாரிகள், மதிமுக ஆகிய கட்சிகளும் உள்ளன. தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடதுசாரிகள், மதிமுகவினர் தங்களுக்கும் இடம் கேட்பர். அவர்கள் கேட்கும் இடங்களையும் திமுக மாவட்ட நிர்வாகம் தந்துவிடுமா? என்பது உறுதியாக இல்லை. இதனால் இடதுசாரிகளும் மதிமுகவும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.
தேமுதிக தனித்து
இன்னொரு பக்கம் பாமக தனித்துப் போட்டியிடுவதால் திமுக கூட்டணியில் சில இடங்களை எப்படியாவது வாங்கி நாங்களும் ஆக்டிவ்வாக வந்துவிட்டோம் என காட்டுவதற்கு தேமுதிக கணக்குப் போட்டு காய் நகர்த்தியது. தேமுதிகவை கூட்டணியில் தக்க வைக்க அனேகமாக ஒன்றிரண்டு இடங்களை கொடுத்து திமுக சமாதானப்படுத்த வாய்ப்பிருக்கிறது என கூறப்ப்பட்டது. ஆனால் தேமுதிகவும் இப்போது தனித்துப் போட்டியிடுகிறது.
கூட்டணிக்கு வேட்டு?
உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாவட்ட நிர்வாகங்கள் காட்டுகிற இந்த பாரபட்சம் அனேகமாக கூட்டணிக்கே வேட்டு வைக்கும் நிலைமையை உருவாக்கக் கூடும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். இதுநாள் வரை திமுக அரசாங்கத்தை தாங்கிக் கொண்டு புகழ்ந்து பேசி வருகின்றன கூட்டணி கட்சிகள். இந்த உள்ளாட்சித் தேர்தல் பங்கீட்டை வைத்து திமுகவை இந்த கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கினால் நிச்சயம் திமுக தலைமையிலான கூட்டணியில் ஆகப் பெரும் விரிசல் விழும். இது 2024 லோக்சபா தேர்தலை அத்தனை எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து எதிர்கொள்ளலாம் என்கிற திமுக தலைமையின் முயற்சிகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாகவும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.