எப்படியெல்லாம் சிக்னல் வருது! எடப்பாடி பழனிசாமியின் தாறுமாறு ஆட்டத்தில் தடுமாறுதோ திமுக அணி சிபிஎம்?
சென்னை: பாஜகவுடன் கூட்டணி இல்லவே இல்லை என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு அக்கட்சியின் தொண்டர்களைவிட அதி உற்சாகமாக வரவேற்பது திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஎம் கட்சி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. ஆனால் இந்த முடிவு தற்காலிகமானது; நாடகம்; மீண்டும் ஒன்று சேருவார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் பொதுவான கருத்து. திமுக கூட்டணி கட்சிகள் இப்படித்தான் தொடர்ச்சியாக கூறினர்.

எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்: ஆனால் பாஜகவுடன் கூட்டணி முறிந்தது முறிந்ததுதான்; இஸ்லாமியர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்; 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் மட்டுமல்ல; 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக திட்டவட்டமாக அறிவித்து வருகிறார். மேலும் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகள், பிரதிநிதிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகின்றனர்.

திமுக கூட்டணி கதவுகளுக்கு கதவு திறப்பு: இப்போது எடப்பாடி பழனிசாமியின் திட்டவட்டமான இந்த நிலைப்பாடு திமுக கூட்டணியில் சலசலப்பையும் சலனங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் தகவல். என்னதான் திமுக கூட்டணியில் வலிமையாக இருக்கிறோம் என அத்தனை கட்சிகள் சொல்லிக் கொண்டாலும் பாஜக இல்லாத அதிமுக கூட்டணி என்பது அந்த கட்சிகளுக்கு திறந்து வைக்கப்பட்ட புதிய வாய்ப்பு. இதனால் திமுக கூட்டணியில் தொகுதிகளை அதிகமாக கேட்பது; விரும்பிய தொகுதிகளை கேட்பது; தராமல் போனால் அதிமுக பக்கம் போவது என மிரட்டுவது என்கிற யுக்திகளை கையில் எடுக்க திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது என்றே கூறப்படுகிறது.

சிபிஎம் இப்படி செய்ததே?: இதனை சிபிஎம் கட்சி தமது அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிர் மூலமே வெளிப்படுத்தி இருக்கிறது. பாஜகவுடனான கூட்டணி இல்லை என்ற எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை- அதாவது பிரதான எதிர்க்கட்சித் தலைவரின் அறிவிப்பை ஆளும் திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சியின் தீக்கதிர் நாளேடு தலைப்புச் செய்தியாக எட்டு கால செய்தியாக வெளியிட்டு பெரு மகிழ்ச்சியை கொண்டாடித் தீர்க்கிறது. அதே பத்திரிகையில் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகள் தொடர்பாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் போனால் போகிறது என 6-ம் பக்கத்தில் போட்டுவிட்டிருக்கிறது. இது திமுக தலைமையை ரொம்பவே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறதாம்.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு குஷி: இது தொடர்பாக நாம் அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, எத்தனை காலத்துக்கு திமுக கொடுக்கிற சீட், தொகுதிகளை மட்டுமே பெற்றுக் கொள்வது; வெற்றியோ தோல்வியோ கட்சிக்கும் ஒரு ஏற்றம் வேண்டும் என நினைப்பது அனைத்து தலைவர்களின் விருப்பம். இப்போது திமுக, அதிமுக இரண்டும் பாஜக அணியில் இல்லை. இதனால் இரண்டு கட்சிகள் தலைமையிலான கூட்டணியும் ஒரே மாதிரியானவை. ஆகையால் இங்கிருந்து அங்கு போவது என்பது இயல்பான ஒன்று. அதற்கான ஒரு சிக்னலாவும் சிபிஎம்-ன் இந்த தீக்கதிர் செய்தியைப் பார்க்கலாம் என்கின்றனர். அதேநேரத்தில் இது அப்பட்டமான அரசியல் விளையாட்டுதான். இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை; அதிமுகவின் முடிவு என்பது கட்சிகளின் பேரம் பேசும் சக்தியை வலிமையாக்குகிறது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications