மதுவிலக்கை அமல்படுத்து- டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடு! சென்னையில் திருமாவளவன் இன்று போராட்டம்!
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; டாஸ்மாக் மதுபான கடைகளை இழுத்து மூட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று மாலை 4 மணிக்கு திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் இதுவரை 57 உயிர்களைக் குடித்துள்ளது. தொடர்ந்தும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயத்தை மட்டுமல்ல தமிழ்நாட்டில் மதுவிற்பனையையே முழுமையாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் கள்ளச்சாராயக் கொடுமையைத் தடுக்கும் நிரந்தர தீர்வு என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். மெத்தனால் என்னும் நஞ்சு கலந்த கள்ளச்சாராயம் கூடுதல் போதை அளிப்பதாகச் சொல்லி, சட்டத்துக்கு விரோதமாக ஒரு கும்பல் இந்த வணிகத்தில் ஈடுபட்டுவருகிறது.
மீளமுடியாத போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் தாம் அந்த வகையான கள்ளமதுவுக்கு வாடிக்கையாளர்களாக மாறி வருகின்றனர்.
இத்தகைய கள்ளவணிகம் கள்ளக்குறிச்சிப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. அதன்விளைவாக தற்போது பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்துகிறோம் என தெரிவித்திருந்தார்.
மேலும் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை இழுத்து மூடக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் எனவும் திருமாவளவன் தெரிவித்திருந்தார். சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் இந்த போராட்டம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications