திமுக - அதிமுக இணைய வாய்ப்பில்லை.. இரு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்கள்.. டிகேஎஸ் இளங்கோவன்!
சென்னை: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்கள் என்று திமுக நிர்வாகி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுகவும், அதிமுகவும் இணைய வாய்ப்பில்லை என்று கூறியுள்ள டிகேஎஸ் இளங்கோவன், எதிர்க்கட்சியாக திமுக எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காகவே ஆலோசனை நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனாலும் விஜய் தரப்பால் இன்னும் பெரும்பான்மை எண்ணிக்கையாக 118 என்ற நம்பரை எட்ட முடியவில்லை. இதற்காக விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக கோரி இருக்கிறது.

அதுதொடர்பாக இந்த 3 கட்சிகளும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் திடீரென கடந்த 2 நாட்களாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க போவதாக தகவல் வெளியாகியது. அதற்கேற்ப புதுச்சேரியில் அதிமுகவின் 28 எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திமுக தரப்பில் சில ஆலோசனை நடந்து வருகிறது.
திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்திலும், இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம். இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை மு.க.ஸ்டாலினுக்கு வழங்கியும் தீர்மானம் போடப்பட்டது.
இதனால் திமுக ஆதரவில் அதிமுக ஆட்சி அமைக்குமா என்ற கேள்விகள் எழுந்தன. கடந்த 2 நாட்களாக இந்த செய்திகள் வட்டமடித்து வரும் சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தரப்பிலும் எந்த மறுப்பும் அளிக்கவில்லை. இந்த நிலையில் முதல்முறையாக திமுக தரப்பில் டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.
டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாடு அரசியலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்களாக இருக்கிறோம். அதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைய வாய்ப்பில்லை. தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், எதிர்க்கட்சியாக திமுக எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காகவே ஆலோசனை நடந்தது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications