விதை நாங்கள் போட்டது... 110 விதியின் கீழ் அறிவிப்பும்... சர்ச்சையும்... பி.டி.ஆர். Vs ஜெயக்குமார்..!
சென்னை: 110 விதியின் கீழ் அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை எனக் கூறியிருக்கிறார் நிதி அமைச்சர் தியாகராஜன்.
இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தங்கள் ஆட்சியில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து மேலும் விரிவாக பார்க்கலாம்,

110 விதி
அதிமுக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் வெளியிடலாம். இந்த அறிவிப்பு மீது எந்தவொரு விவாதமும் நடத்த முடியாது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் குறிப்பாக 2011-2016 காலகட்டத்தில் 110 விதியின் கீழ் எண்ணற்ற அறிவிப்புகளை வெளியிட்டார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அதற்கு பிறகு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் இந்த விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

நிதி அமைச்சர்
இந்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்த விவரத்தை விலாவாரியாக தெரிவித்திருக்கிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும் அவற்றில் பல அறிவிப்புகளுக்கு அரசாணைகளே பிறப்பிக்கப்படாமல் இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு;

1,704 அறிவிப்புகள்
கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் 1,704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புகளின் மொத்த மதிப்பு ரூ. 3.27 லட்சம் கோடி என்றும் இதில், ரூ.87,405 கோடி மதிப்பிலான 1,167 அறிவிப்புகள் மட்டுமே செயல்படுத்தப் பட்டிருக்கின்றன எனவும் கூறியிருக்கிறார். எஞ்சியிருக்கும் ரூ.2.4 லட்சம் கோடி மதிப்பிலான 537 அறிவிப்புகள் நிலுவையில் இருப்பதாகவும் அதில் ரூ.5,470 கோடி மதிப்பிலான 26 அறிவிப்புகள் செயல்படுத்த முடியாமல் கைவிடப்பட்டுள்ளதாகவும் பி.டி.ஆர். அலசி ஆராய்ந்து அறிவித்துள்ளார்.

அரசாணைகள்
செயல்படுத்தப்பட முடியாமல் கைவிடப்பட்ட 26 அறிவிப்புகளில் 19 அறிவிப்புகள் 2011-2016 அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டவை என சொல்லியிருக்கிறார். மேலும், ரூ.9,741 கோடி மதிப்புள்ள 20 அறிவிப்புகளுக்கு அரசாணைகளே பிறப்பிக்கப்படவில்லை என்பதையும் நிதி அமைச்சர் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட 110 விதியின் கீழான அறிவிப்புகள் செயல்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்கு ஆளில்லை
இதனிடையே 110 விதி தொடர்பாக நிதி அமைச்சர் தியாகராஜன் வெளியிட்டுள்ள தகவல் குறித்து அதிமுக தரப்பு விளக்கத்தை அறிய அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரை நாம் தொடர்பு கொண்டு பேசினோம். எல்லோரும் கேள்வியை உள்வாங்குவதை விட எஸ்கேப் ஆவதிலேயே குறியாக இருந்தார்கள். இறுதியாக நமது கேள்விக்கு பதிலளிக்க முன்வந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அவர் நம்மிடம் கூறியதாவது;

ஜெயக்குமார் பதில்
''110 விதியின் கீழ் நாங்கள் அறிவிப்புகள் வெளியிடும் போது விமர்சித்த திமுக, இன்று எங்களை தானே பின்பற்றுகிறது. 110 அறிவிப்புகளில் சிலவற்றை உடனடியாக செயல்படுத்த முடியும், சிலவற்றை காலப்போக்கில் அதற்கேற்ற திட்ட வரைவுகளின் அடிப்படையில் படிப்படியாக செய்து முடிக்க முடியும். உதாரணத்துக்கு ரூ.100 மதிப்பில் அணை கட்டப்பட்டும் என அறிவித்தால் நாளையே அந்த பணிகளை தொடங்கிவிட முடியாது. அதற்குரிய திட்டவரைவு அறிக்கையை உலக வங்கிக்கு அனுப்பி பின் தொடர்வது என இப்படி பல நடைமுறைகள் இருக்கின்றன.''

விதை யார் போட்டது
விதை யார் போட்டது என்பதை தான் பார்க்க வேண்டும். விதையை நட்டவுடன் அது மரமாகி பழம் தந்துவிடாது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட 110 விதியின் கீழான அறிவிப்புகள் அனைத்தும் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடையது. இதனை நிதி அமைச்சர் தியாகராஜன் புரிந்துகொள்ள வேண்டும்'' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications