அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்.. சேலம் மாநகராட்சி கூட்டத்தில் களேபரம்!
சேலம்: சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மாமன்றக் குழு தலைவர் மீது திமுக பெண் கவுன்சிலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சனைகள், கோரிக்கைகளை முன்வைத்து கவுன்சிலர்கள் பேசினர்.

அப்போது அதிமுக மாமன்றக் குழு தலைவரும், கவுன்சிலருமான யாதவ மூர்த்தி என்பவர் எழுந்து பேசினார். தனது வார்டில் உள்ள டெண்டர்கள் அமைச்சர்களின் சிபாரிசு பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டி பேசினார். இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிமுக கவுன்சிலர் யாதவ மூர்த்தி பேசிக்கொண்டிருந்தபோது திமுக கவுன்சிலரான சுஹாசினி என்பவர் குறுக்கிட்டார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் எழுந்தது. ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதம் மோதலாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
யாதவ மூர்த்தியை, பெண் கவுன்சிலர் சுஹாசினி கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து திமுக - அதிமுக கவுன்சிலர்கள் அடித்துக் கொண்டனர். இருதரப்புக்கும் இடையே எழுந்த கைகலப்பால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. இருவரின் சண்டையை அங்கிருந்த சிலர் தடுக்க முயன்றனர். எனினும் விடாமல் அவர்கள் சண்டை போட்டுள்ளனர்.
இதையடுத்து மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையர் ஆகியோர் கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதன் காரணமாக மாநகராட்சி கூட்ட அரங்கில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. திமுக கவுன்சிலரின் நடவடிக்கையை கண்டித்து அதிமுகவினர் மேயர் இருக்கை முன்பு சென்று அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
"நாங்கள் தவறாக ஏதும் பேசவில்லை. ஒவ்வொரு டெண்டரிலும் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறுகிறது ஆதாரங்களுடன் பேசி வருகிறோம்.
45-வது வார்டு திமுக கவுன்சிலர் சுகாசினி தகாத வார்த்தைகள் பேசி என்னை தாக்கினார். அந்த கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அதுவரை இங்கிருந்து வெளியேற மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications