Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக, காங். கூட்டணி வாஷ் அவுட்? அமைச்சரவையில் இடம் கேட்பது ஆபத்து? பீட்டர் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சரவையில் பங்கு கேட்கும் காங்கிரஸ் கட்சியின் திட்டமானது கூட்டணியின் வெற்றிக்கே வேட்டு வைத்துவிடும் என்று காங் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுகவுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றியை அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியில் சில சலசலப்புகள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன. சில நாட்கள் முன்னதாக தேவக்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், “கூட்டணியில் இருக்கிறோம் என்பதனால் திமுகவிடம் கூனிக் குறுகி நிற்க வேண்டிய தேவை இல்லை” என்று பேசி இருந்தார். இதேபோன்று முன்பு ஒருமுறை காங். மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, “தமிழகத்தில் எத்தனை நாள் நாம் பிறரைச் சார்ந்து இருக்கப் போகிறோம்? சுயமாக வளர வேண்டாமா?” என்ற ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். இந்த இரண்டு பேர் கருத்திற்கும் மிகக் காட்டமாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்தார். திமுக தயவில்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று மறுத்துப் பேசி இருந்தார்.

DMK Peter Alphonse

இந்நிலையில் காங் கட்சியின் கூட்டணி அமைச்சரவைக் கனவு இறுதியில் 2026 தேர்தல் வெற்றிக்கு வேட்டு வைத்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் காங் மற்று திமுக இடையேயான கருத்து மோதல்கள் பற்றி ஒரு டியூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “என்னைப் பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் இந்த வார்த்தைப் போர், விவாதம் தேவையற்றது என்றுதான் சொல்வேன். நான் இந்த காங்கிரஸ் கட்சியில் எனது 17வயதில் இணைந்தேன். அதன்பின் 29 வயதில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்றேன். நான் தலைவராக இருந்தபோது திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மூன்று ஒன்றுபட்ட மாவட்டமாக இருந்தது. அப்போது இது மிகப்பெரிய மாவட்டம். அன்றைக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 47% வாக்கு வங்கி இருந்தது. இன்றைக்கு காங்கிரசின் வாங்கு வங்கி என்ன? இந்தக் கட்சி எங்கே தனது ஓட்டு வங்கியை தவறவிட்டது?

கட்சியை வளர்ப்பது என்பது வேறு, கூட்டணி அமைத்து அதிகாரத்தைப் பிடிப்பது என்பது வேறு. இரண்டையும் குழப்புக் கொள்ளக் கூடாது. இந்தியா முழுவதும் உள்ள கள யதார்த்தம் என்ன? இனிமேல் எந்த அரசியல் கட்சியும் தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஒரே கட்சியால் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஆகவே, பலரது தோழமை தேவை. திமுக கூட்டணி பலமாக இருந்ததால்தான் பாஜகவை தோற்கடிக்க முடிந்தது. இன்னும் 20 ஆண்டுக்காலத்திற்குக் கண்ணுக்கு எட்டியது வரை வேறு மாற்று யாரும் இல்லை. கூட்டணி பலத்தோடு இருந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும்.

அப்படியான நேரத்தில் கூட்டணிக்குள் முரண் வருவதைப் போல பேசுவதே கூட்டணிக்குக் குந்தகத்தை ஏற்படுத்தும். கூட்டணியைக் கலகலக்க வைத்துவிடும். காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும். கட்சியில் உறுப்பினர்களை அதிகம் சேர்க்க வேண்டு. கட்சி மாநாடுகளை மாவட்டம் தோறும் நடத்த வேண்டும். மக்களிடம் போய்ச் சேர்வதற்கு ஊடகங்களை உருவாக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் தமிழக காங்கிரஸ் கட்சியிடம் என்ன திட்டம் இருக்கிறது? வெறுமனே கூட்டணிக்குள் மனவருத்தம் வரும்படி பேசினால் போதுமா? எதிர்கால திட்டம் என்ன? அதை யோசிக்க வேண்டாமா?

காமராசர் முதல்வராக இருந்தார். அவர் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் இல்லை. காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ முதல்வர்கள் இருந்துள்ளனர். பக்தவத்சலம் இருந்தார். குமாரசாமி ராஜா இருந்தார். ஓமந்தூர் ரெட்டியார் இருந்தார். ராஜாஜி இருந்தார். ஆனால், இவர்களின் ஆட்சியை அமைப்போம் என்று காங்கிரஸ் சொல்லவில்லை. காமராஜர் ஆட்சி அமைப்போம் என்றுதான் சொல்கிறது. ஏன் சொல்கிறோம். அது எல்லோருக்குமான ஆட்சி. அனைவருக்கும் கல்வி. அனைவருக்கும் உணவு. அனைவருக்கும் சம உரிமை. இதுதான் காமராஜர் ஆட்சி. அரசியலில் ஒழுக்கம், அரசு நிர்வாகத்தில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை இவைதான் காமராஜர் ஆட்சியின் அடையாளம்.

முதலில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு தேர்தலை நடத்துங்கள். செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி தலைவரைத் தேர்வு செய்யுங்கள். மூப்பனாரும் நெடுமாறனும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவிக்குப் போட்டிப்போட்டனர். நான் மூப்பனாருக்கு ஓட்டுப் போட்டேன். அதைப்போல ஒரு தேர்தல் கட்சிக்கு தேவையா இல்லையா? தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் தலைவருக்குத் தானே பவர் இருக்கும்? அவர்தானே கட்சியை வழிநடத்த, கட்டளையிட தகுதியானவராக இருப்பார்? காங்கிரஸ் கட்சியின் வருங்காலம் அப்போது தானே பிரகாசமாக இருக்கும்? எங்கள் காலம் முடிந்துவிட்டது. எனவே எந்த ஆதாயமும் எதிர்பார்த்து இதை நான் சொல்லவில்லை.

முதலில் மாநில அரசியலை காங்கிரஸ் புரிந்துகொள்ள வேண்டும். மாநில பிரச்சினைக்குக் காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் கட்சி வேர் பிடித்து வளரும். இல்லை என்றால் எந்த மாற்றமும் நடக்காது. இன்றைக்கு மாநில உரிமையை திமுக பேசுகிறது. மோடியைக் கடுமையாக எதிர்க்கிறது. ஸ்டாலின் அளவுக்கு மோடியை எடப்பாடி வெளிப்படையாக எதிர்க்க முடியுமா? முடியாது. அவருக்கு மோடியோ, வலதுசாரி அரசியலோ பிரச்சினை இல்லை. சசிகலாவும் ஓபிஎஸ், டிடிவி தினகரனும் தான் பிரச்சினை. ஆகவே அவர் மோடியை எதிர்க்கவே மாட்டார்.

ஆகவே இப்போது திமுகவுடன் கூட்டணி ஆட்சி பற்றிப் பேசுவது நல்லது அல்ல. எம்.பி.சுப்பிரமணியம் 1980களில் தமிழக காங் தலைவராக இருந்தபோது கருணாநிதியுடன் கூட்டணி போட்டார். 50க்கு 50 என சீட்டு என்றும் ஆட்சியில் பங்கு என்றும் திட்டம் வகுக்கப்பட்டது. இறுதியில் யார் முதல்வர் என்று ஒரு சர்ச்சையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. அதன் விளைவால் கூட்டணி படு தோல்வியைச் சந்தித்தது. அதே நிலை மீண்டும் இப்போது வந்துவிடக்கூடாது. அந்தத் தெளிவு முதலில் காங் கட்சிக்கு வரவேண்டும்” என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+