துணைவேந்தர்களுக்கு பஞ்சமா... பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டவர்களுக்கு பதவி நீட்டிப்பு ஏன்..? -திமுக
சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்ட துணைவேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு தரப்பட்டது ஏன் என திமுக வினவியுள்ளது.
உயர்கல்வித்துறையை எந்த அளவிற்குச் சீரழிக்க முடியுமோ அந்த அளவிற்கு அ.தி.மு.க. அரசு சீரழித்து வைத்துள்ளதாக திமுக சாடியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பாரதிதாசன் பல்கலை
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் உத்தரவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இருவரின் பதவிக்காலமும் நிறைவுற்று- பிரிவு உபச்சார விழாவும் நடத்தப்பட்டு- பொறுப்புகளை ஒப்படைத்த பிறகு பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது ஆரோக்கியமான செயலன்று என்பது மட்டுமல்ல- அவசியமற்றதுமாகும்.

கேள்விக் கணை
வெளிப்படையான தேர்வு முறைக்கு "விடை" கொடுக்கும் மிக மோசமான செயலாகும். புதிய துணை வேந்தர்களைத் தேர்வு செய்ய "தேர்வுக்குழு" அமைக்கப்பட்ட பிறகு- துணை வேந்தர்களுக்கு ஏன் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்? அ.தி.மு.க. அரசின் சார்பில் அந்தக் கோரிக்கை வைக்கப்பட்டதா? தமிழக ஆளுநர் அவர்கள் தன்னிச்சையாக இந்த முடிவினை எடுத்தாரா? என்பதெல்லாம் கேள்விக் கணைகளாக அணிவகுத்து நிற்கின்றன.

அவசர அறிவிப்பு
துணை வேந்தர்கள் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு- உயர் கல்வித்துறைச் செயலாளர் தலைமையில் துணை வேந்தர் பொறுப்புக் குழுவும் அமைக்கப்பட்ட பிறகு,ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியாகியுள்ள இந்த அவசர அறிவிப்பு- திடீர் பணி நீட்டிப்பு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும்- பேராசிரியர்கள்- ஆசிரியர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சீரழிப்பு
உயர்கல்வித்துறையை எந்த அளவிற்குச் சீரழிக்க முடியுமோ அந்த அளவிற்கு அ.தி.மு.க. அரசு சீரழிப்பதும்- அதை ஆளுநர் அவர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பதும் அவர் வகிக்கும் வேந்தர் பொறுப்பிற்கு ஏற்றதல்ல! "பணி நீட்டிப்பு" வழங்கிய துணை வேந்தர்களை வைத்துக் கொண்டு- உயர்கல்வியின் தரத்தை எப்படி உயர்த்த முடியும் எனத் தமிழக ஆளுநர் கருதுகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அ.தி.மு.க. அரசும் இதற்கு எப்படி ஒப்புதல் கொடுத்தது என்பதும் திரை விலகாத மர்மமாக இருக்கிறது.

திரும்பப்பெறுக
எனவே, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் பணி நீட்டிப்பு உத்தரவினை வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட வேறு எந்தப் பல்கலைக்கழகத்திற்கும் துணை வேந்தர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கும் முயற்சியில் வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர் அவர்கள் ஈடுபட வேண்டாம் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications