அதிமுக பிளவிற்கு பின்னணியில் இருப்பது திமுக..தேவைப்பட்டால் நானே பேசுவேன்! தூதுக்கு தயாராகும் நயினார்
சென்னை: அதிமுகவில் திமுக தூண்டுதலில் தான் இவ்வளவு பிரச்சனை நடக்கிறது எனவும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பின்னணியில் திமுக தான் உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மேலும், தமிழக பாஜக கட்சி சார்பாக எல்லாரும் ஒன்று சேர வேண்டும் என்று பேசி இருக்கின்றேன், தேவைப்பட்டால் நானே பேச இருக்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்றார். இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," செங்கோட்டையன் டெல்லிக்கு போனால் நான் எப்படி பதில் சொல்ல முடியும்.
ராமர் கோவில், ரிஷிகேஷ் போவதாக கூறி இருக்கின்றார். உங்களுக்குத் தெரிந்த மாதிரி தான் எனக்கும் தெரியும். அவர் எங்கே போய் இருக்கின்றார் என்று எனக்குத் தெரியாது. காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆட்சி செய்யும் போது 90 தடவை ஆட்சியை கலைத்து இருக்கின்றார்கள்.

நயினார் நாகேந்திரன்
காங்கிரஸ் கட்சியின் வழக்கம் அது, எங்கள் கட்சி அது அல்ல. கூட்டணி வளர்ப்பது எங்கள் நோக்கம். ஏற்கனவே நாட்டில் இருக்கும் கம்பெனிகளைத் தான் சேர்த்துக் கொண்டு வந்து இருக்கின்றார். வெள்ளை அறிக்கை போன தடவை நாங்கள் கேட்டு இருந்தோம் ஆனால் சும்மா ஒரு பதிவை மட்டும் போட்டு இருக்கிறார். பெரிதாக ஒன்றும் கொண்டு வரவில்லை. 2021, 2019, 2016 இது எல்லாம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.
பாஜக
ஏற்கனவே தமிழக பாஜக கட்சி சார்பாக எல்லாரும் ஒன்று சேர வேண்டும் என்று பேசி இருக்கின்றேன். தேவைப்பட்டால், அழைத்தால் நானே பேச இருக்கின்றேன். அவ்வளவுதான், தேவைப்பட்டால் கண்டிப்பாக நானே அழைப்பு கொடுப்பேன். தேர்தல் அறிக்கைகளில் தமிழகம் முழுவதும் துப்புரவுப் பணியாளர்கள் வேலை செய்கின்றார்களோ அவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள். துப்புரவுப் பணியாளர்கள் அதைத்தான் கேட்கின்றார்கள்.
திமுக அரசு
தொடர்ந்து சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். உண்ணாவிரதம் இருந்த இடத்தை மாற்றினார்கள். மதுரையில் போராட்டம் நடத்தினார்கள். இந்த அரசாங்கம் போராடுபவர்களை, அவர்களை கேள்வி கேட்பவர்களை நசுக்கும் அரசாங்கமாக இருக்கின்றது. பாஜக சிறுபான்மை அணி வேலூர் இப்ராஹிம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து நேற்று சிறையில் அடைத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் மட்டுமல்ல எல்லா மிரட்டல்களும் நடக்கின்றன. ஆளுங்கட்சி தரப்பில் எல்லாம் மிரட்டல்கள் நடக்கின்றன.
சிபி ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நிச்சயமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழர், மகாராஷ்டிரா கவர்னராக இருக்கக்கூடிய சிபி ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார். செங்கோட்டையன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு பற்றி எனக்கு தகவல் வரவில்லை. அதிமுக கூட்டணியில் நாங்கள் உள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் ஒரு முடிவு எடுத்திருக்கின்றார். கட்சியில் இருந்து சிலரை நீக்கி உத்தரவிட்டிருக்கின்றார்கள்.
அதிமுக பிளவு
எங்களைப் பொறுத்த அளவில் ஒன்று சேர வேண்டும் என்பதுதான். அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை நாங்கள் போய் சந்திக்க முடியாது. டெல்லிக்கு 11ஆம் தேதி செல்கின்றேன். அவர் எங்கே இருக்கின்றார் என்று செங்கோட்டையனைக் கேட்டு சொல்லுங்கள், அதன் பின்பு அவரை சந்திக்கலாம். திமுக அரசாங்கம் தூண்டுதலின் பெயரில் அனைத்து வேலைகளையும் செய்கிறது. எல்லா பின்னணிக்கும் காரணம் திமுக அரசாங்கம் தான்" என்றார்.












Click it and Unblock the Notifications