80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு.. அதிமுக ஆதரவு.. பாஜக, திமுக, காங், கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
சென்னை: 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிக்கும் நடைமுறையை தமிழகத்தில் கொண்டு வருவதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கொரோனா காலகட்டத்தில் முதல்முறையாக பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே தபால் வாக்கு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதே சலுகையை தற்போது நடைபெறவிருக்கும் தமிழகம், புதுவை, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் சென்னை வருகை தந்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் குறித்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 13 லட்சம் பேர் உள்ளனர். இந்த 80 வயது முதியவர்கள் தபால் வாக்கு அளிக்கும் நடைமுறைக்கு அதிமுக ஆதரவு தந்துள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் தபால் வாக்கு தேவையில்லை என பாஜக தெரிவித்துள்ளது.
அது போல் 80 வயதுடையோருக்கு தபால் ஓட்டு நடைமுறைக்கு திமுக, காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தபால் வாக்கு கொடுத்தால் வாக்களிப்பதில் ரகசியம் காக்கப்படாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications