அசத்தல் ஸ்டாலின்.. திமுகவின் பூத் டார்கெட்.. 2026-க்கான பெரிய பயணம் மாமல்லபுரத்தில் இன்று ஆரம்பம்
சென்னை: தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற பயிற்சிக் கூட்டம் இன்று அக்டோபர் 28ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் நடக்கும் இந்த இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோர் தவறாது கலந்து கொள்ள என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் திட்டமிடலின்படி வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை திமுக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பாஜக அரசின் முன்பு "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பரப்புரையை கழகம் தொடங்கவுள்ளது.

இன்று பயிற்சிக் கூட்டம்
அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற முன்னெடுப்புக்காக "திமுக மாவட்ட செயலாளர்கள் - மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் - சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம்" அக்.28ம் தேதி செவ்வாய்கிழமை, காலை 9 மணிக்கு மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள "கான்ஃப்ளூயன்ஸ் ஹாலில்'' நடைபெறும்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி
இதனிடையே நேற்றைய தினம், 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' என்ற திமுக பயிற்சிக்கூட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அதில், "மாநில நிர்வாகியாக இருந்தாலும் கூட அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும். மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் S.I.R. செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து கழகத்தினர் கடமையாற்ற வேண்டும்.
பாஜக - சார் செயல்பாடுகள்
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்ட நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்பட அதற்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியவர்கள் தி.மு.க.வினரும் தோழமைக் கட்சியினரும்தான்.
என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன் என ஒவ்வொரு கழக உடன்பிறப்பும், உறுதியேற்று, களப்பணியாற்றினால், எல்லா வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, 2026-ல் 7வது முறையாக கழக ஆட்சி அமைவது உறுதியாகிவிடும்.
மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனியாது. தலைகுனிய விடமாட்டார்கள் கழக உடன்பிறப்புகள். அந்த நம்பிக்கையுடனும் உறுதியுடனும்தான் மாமல்லபுரத்தில் நடைபெறும் பயிற்சிக் கூட்டத்தில் உங்களைச் சந்திக்க வருகிறேன்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பணிகள்
அந்தவகையில் இன்றைய தினம் திமுக பயிற்சிக்கூட்டம் மாமல்லபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
முதல்வர் தலைமையில் நடந்து வரும் இந்த கூட்டத்தில் வரப்போகும் தேர்தலில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், கழகத் தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கூட்ட முடிவில் முக்கிய நிர்வாகிகளுக்கு சில பணிகளை, முதலமைச்சர் ஒதுக்கி வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications