என்னப்பா இதை கொண்டு வர்றீங்க.. பிறந்த நாள் பரிசாக ஒட்டகம்.. ஆச்சர்யமாக பார்த்த முதல்வர் ஸ்டாலின்!
திமுக தொண்டர் ஒருவர் முதலமைச்சரின் பிறந்த நாளுக்கு ஒட்டகத்தை பரிசளித்தார்.
சென்னை : இன்று 70வது பிறந்தநாள் காணும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் ஒருவர் ஒட்டகத்தை பரிசாக அளித்துள்ளார். இதற்கு முன்பு அவர் வரையாடு, ஜல்லிக்கட்டு காளை போன்றவற்றை பரிசாக அளித்திருக்கிறார்.
திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
திமுக நிர்வாகிகள், தொண்டர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வருக்கு நேரில் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் தொண்டர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து கூறுவதற்கு பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின், தொண்டர்களைச் சந்தித்து அவர்களது வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டதோடு நன்றியும் தெரிவித்தார். தொண்டர்கள் அனைவருக்கும் மஞ்சப்பையில் மரக்கன்றுகள் வைத்து அன்பளிப்பாக வழங்கினார்.

ஒட்டகம் பரிசு
அப்போது முதலமைச்சருக்கு பரிசளிப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர்ஷா என்ற திமுக நிர்வாகி ஒட்டகத்தை அழைத்து வந்திருந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 2 வயது கொண்ட ஒட்டகத்துடன் வந்தார் ஜாகிர்ஷா. ஒட்டகத்தின் மீது கருப்பு - சிவப்பு சால்வை அணிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு ஆடு, மாடு என ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உயிருள்ளவற்றை பரிசாக அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆச்சர்யமாக பார்த்த ஸ்டாலின்
திமுக தொண்டர்கள் வரிசையாக பரிசுகளை கொடுத்தும், வாழ்த்து தெரிவித்தும் நகர்ந்த நிலையில், திமுக தொண்டர் ஒருவர் ஒட்டகத்தை பிடித்துக்கொண்டு மேடைக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தனர். ஜாகிர்ஷா ஒட்டகத்தின் கயிற்றை முதல்வரிடம் கொடுத்தார். அதன்பின்னர், அங்கிருந்து ஒட்டகத்தை கீழே இறக்கிக் கொண்டு சென்றனர்.

உலகில் யாரும் கொடுக்காத பரிசு
முதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக ஒட்டகத்தை வழங்கிய திமுக நிர்வாகி ஜாகிர்ஷா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தமிழ்நாட்டின் முதல்வருக்கு ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் உயிர் பொருள்களை பரிசாக வழங்கி வருகிறேன். முதலில் ராஜ குதிரை கொடுத்தேன். அதன் பிறகு ஜல்லிக்கட்டு காளை கொடுத்தோம். அதன்பிறகு வரையாடு கொடுத்தோம். அதன் பிறகு வாஸ்து மீன் கொடுத்தோம். அதன் பிறகு புறா கொடுத்தோம். இந்த வருடம் உலகத்திலே யாரும் செய்யாத செயல், இதுவரை உலகத்தில் யாரும் கொடுக்காத ஒரு பொருளை தலைவருக்காக கொடுக்கிறேன். இந்த ஒட்டகத்தை கொடுக்கிறேன். இதன் வயது இரண்டு. மருத்துவச் சான்றிதழ் எல்லாம் பெற்றிருக்கிறோம். இதற்கு விலை மதிப்பு எல்லாம் கிடையாது." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications