திமுக வேட்பாளர் பட்டியல்- கனிமொழி, டிஆர் பாலு, ஆ.ராசா, உட்பட 10 சிட்டிங் எம்பிக்கள் மீண்டும் போட்டி!
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 21 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுகவில் 10 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் திமுக கூட்டணியில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வடசென்னை, மத்திய சென்னை,தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர் , அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஆரணி, தேனி, சேலம், தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு , பெரம்பலூர், தஞ்சை , தென்காசி
மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்களை இன்று அக்கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

லோக்சபா தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். திமுக 10 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.
திமுகவில் மீண்டும் போட்டியிடும் 10 சிட்டிங் எம்பிக்கள் விவரம்:
தூத்துக்குடி- கனிமொழி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்; தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி. 2007-ல் ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றம் சென்றார். 2013-ல் மீண்டும் ராஜ்யசபா எம்பியானார். ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வென்றார். தற்போது திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக பதவி வகிக்கிறார். 2019 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 5,63,143 வாக்குகள் பெற்று தம்மை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய தெலுங்கானா- புதுவை ஆளுநரான பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனை தோற்கடித்தார்.
வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி: திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிப்பு படித்த கலாநிதி, திமுக மருத்துவ அணியில் பணியாற்றினார். 2019 லோக்சபா தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு 5,90,986 (61.85%) வாக்குகள் பெற்று வென்றார்.
தென் சென்னை- தமிழச்சி தங்க பாண்டியன்: விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள். தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி. 2019 லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு 5,64,872 (50.17%) வாக்குகளைப் பெற்று வென்றவர்.
மத்திய சென்னை - தயாநிதி மாறன்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும் முதுபெரும் திராவிடர் இயக்க தலைவருமான முரசொலி மாறனின் இளைய மகன் தயாநிதி மாறன். 2004, 2009, 2019 லோக்சபா தேர்தல்களில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்பியாக வென்றவர். 2019 லோக்சபா தேர்தலில் மத்திய சென்னையில் 4,48,911 (57.15%) வாக்குகள் பெற்று வென்றார். முந்தைய 2014 தேர்தலில் 2,87,455 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவி இருந்தார் தயாநிதி மாறன்.
ஶ்ரீபெரும்புதூர்- டி ஆர்பாலு: திமுகவின் தற்போதைய மூத்த தலைவர்களில் ஒருவர் டிஆர் பாலு. திமுகவின் லோக்சபா குழு தலைவர். திமுக பொருளாளர். 1986-ல் ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்துக்கு சென்றவர். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். தென் சென்னை லோக்சபா தொகுதியில் 1996 முதல் 2004-ம் ஆண்டு வரை 4 முறை தொடர்ந்து வென்று எம்பியானவர் டிஆர் பாலு. 2009, 2019 லோக்சபா தேர்தல்களில் ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2019-ல் ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் 7,93,281 வாக்குகள் பெற்று அசத்தல் வெற்றியைப் பெற்றவர் டிஆர் பாலு.
அரக்கோணம் ஜெகத்ரட்சகன்: எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவின் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். 1984-ல் அதிமுக எம்பியாக நாடாளுமன்றம் சென்றவர். 1985-89-ல் அதிமுக லோக்சபா குழு தலைவராக இருந்தவர். 1999, 2009, 2019 லோக்சபா தேர்தல்களில் அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார்.
வேலூர்- கதிர் ஆனந்த்: திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன். முதல் முறையாக 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பியானார். அத்தேர்தலில் 4,85,340 வாக்குகள் பெற்று வென்றவர் கதிர் ஆனந்த்.
நீலகிரி- ஆ.ராசா: திமுகவின் துணைப் பொதுச்செயலாளர். திராவிடர் இயக்க கொள்கைகளை உரக்க பேசும் பிரசார பீரங்கி. முன்னாள் மத்திய அமைச்சர். 1996-ல் பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் 1998-ல் பெரம்பலூர் தொகுதியில் தோல்வியை தழுவிய ஆ.ராசா, 1999, 2004, 2009 தேர்தல்களில் தொடர்ந்து அதே தொகுதியில் வென்றார், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். 2009, 2019-ல் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2014-ல் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா தோல்வியைத் தழுவினார். 2019 லோக்சபா தேர்தலில் 3,16,802 வாக்குகள் பெற்று வென்றார்.
திருவண்ணாமலை அண்ணாதுரை: 2014 தேர்தலில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். அத்தேர்தலில் அதிமுகவின் வனரோஜாவிடம் தோல்வியைத் தழுவினார். ஆனால் 2019 தேர்தலில் 6,66,272 வாக்குகள் பெற்று அபார வெற்றியைப் பெற்றார்.
காஞ்சிபுரம் செல்வம், எம்.காம். எம்.பில், எல்.எல்.பி படித்தவர். 1996ம் ஆண்டில் வாலாஜாபாத் ஒன்றிய முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். 1997ம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட்டு கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2008ம் ஆண்டு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். 2014-ம் ஆண்டு தேர்தலில் 3,52,529
வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார் செல்வம். ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட ஜி செல்வம் 6,84,004 வாக்குகள் பெற்று அபார வெற்றியைப் பெற்றார்.












Click it and Unblock the Notifications