ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மா.செக்கள் ஆலோசனை கூட்டம்.. என்ன பிளான்?
சென்னை: தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
2026 சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. பூத் கமிட்டி, உறுப்பினர் சேர்க்கை பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக, உறுப்பினர் சேர்க்கை பணிகளை வேகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை" குறித்து, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம், நாளை (ஜூன் 28) சனிக்கிழமை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
"ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் புதிய உறுப்பினர் சேர்க்கையை வரும் ஜூலை 1 ஆம் தேதி முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் உள்ள 68 ஆயிரம் பூத்களிலும் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று 30 சதவிகித வாக்காளர்களை திமுகவில் இணைக்க கேன்வாஸ் செய்ய உள்ளனர்.
மொபைல் செயலி வழியாக திமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில், உறுப்பினர் சேர்க்கை செயலியின் விவரங்கள், செயல்பாடுகள் தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு பயிற்சி முகாம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா தலைமையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளை 10 மண்டலங்களாக பிரித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications