மிஸ்டர் ஆளுநர்! உங்க டூட்டியை முதலில் பாருங்க சார்.. 'ஜாதிய கொடுமை' கருத்துக்கு திமுக பொளேர் பதில்!
சென்னை: தமிழ்நாட்டில் ஜாதிய கொடுமைகள் அதிகமாக நடைபெறுவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்ததற்கு திமுக கடும் பதிலடி கொடுத்துள்ளது.
தஞ்சாவூர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் ரவி அந்நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிக ஜாதிய பாகுபாடுகள், வன்முறைகள் நடைபெறுகின்றன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஜாதிய பாகுபாடு காட்டப்படுகிறது.

மேலும் தலித்துகள் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது, குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது ஆகிய நிகழ்வுகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமது பேச்சில் சுட்டிக்காட்டி இருந்தார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் விவாதங்களையும் உருவாக்கி உள்ளது.
இந்த சர்ச்சை தொடர்பாக திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது: வட இந்தியாவில் தலித்துகள் மீது சிறுநீர் கழிக்கிற ஜாதிய கொடுமை நிகழ்கிறது. ஆனால் அதனை யாருமே கேள்வி கேட்பது கிடையாது. இதுதான் ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமூக நீதி கோட்பாடு போல.. ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படும் போது ஆளுநர் ரவி என்ன மாதிரியாக எதிர்வினையாற்றுகிறார்? யாருக்கும் தெரியாது.

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு ஆளுநராக செயல்படாமல் இருக்கிறார். ஒரு ஆளுநரின் கடமை என்ன? மாநில சட்டசபைகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது என்பதுதான். ஆனால் அந்த கடமையை செய்யாமல் ஆர்.எஸ்.எஸ்.க்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications