நீரு பூத்த நெருப்பாக திமுக -காங்கிரஸ் கூட்டணி! குவியும் புகார்களால் திணறும் கே.எஸ்.அழகிரி!
சென்னை: திமுக -காங்கிரஸ் இடையேயான இடப்பங்கீடு சுமூகமாக இல்லாததால் அக்கூட்டணியில் நீரு பூத்த நெருப்பாக புகைச்சல் இருந்து கொண்டே வருகிறது.
திமுக காங்கிரஸ் இடையேயான உறவு சுமூகமாக இருப்பதாக சென்னையில் அக்கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி பேட்டிகள் கொடுத்தாலும் மாவட்டங்களில் என்னவோ நிலைமை மோசமானதாக தான் இருக்கிறது.
நெல்லை, பெரம்பலுர், கரூர், என பல மாவட்டங்களில் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கும் இடையே கசப்பான நிகழ்வுகள் நடந்துள்ளன.

உள்ளாட்சித் தேர்தல்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்திருக்கிறது. அதன்படி அந்தக் குழுக்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் நெல்லை, கரூர், பெரம்பலூர் என பல மாவட்டங்களில் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை. இதேபோல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இதே நிலை தான் இருப்பதாக சத்தியமூர்த்தி பவனுக்கு புகார் ஓலைகள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.

தனித்துப் போட்டி
இந்த விவகாரத்தில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்து வருகிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என பெரம்பலூர் மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானமே நிறைவேற்றி அழகிரிக்கு அனுப்பி வைத்துவிட்டனர். இன்னும் இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் திமுகவுடனான கூட்டணியை முக்கியமாக கருதுகிறது காங்கிரஸ் மேலிடம்.

காங்கிரஸ் மேலிடம்
ஆனால் இது புரியாமல் வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக போதிய சீட் ஒதுக்கவில்லை எனக் கூறி காங்கிரஸ் நிர்வாகிகள் கே.எஸ்.அழகிரியை குடைந்து எடுத்து வருகின்றனர். இடப்பங்கீடு தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளிடம் இருந்து புகார்கள் குவிந்ததை அடுத்து டெல்லி மேலிடத்திற்கு கே.எஸ்.அழகிரி தரப்பில் இருந்து தகவல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்தே திமுக -காங்கிரஸ் கூட்டணி இடப்பங்கீட்டை சுமூகமாக பேசி முடிக்க ரமேஷ் சென்னிதாலா சென்னை வந்ததாக காரணம் கூறப்படுக்கிறது.

ஒவ்வொரு தேர்தல்
ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுக -காங்கிரஸ் இடையே இடப்பங்கீட்டின் போது இது போன்ற இழுபறி நீடிப்பது வழக்கமான ஒன்றாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட 40 தொகுதிகளை எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு 18 இடங்கள் என பேச்சுவார்த்தையை தொடங்கி 25-ல் முடித்தது திமுக. அதேபோல் இப்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸிடம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கறார் காட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications