திமுக கூட்டணியில் காங்கிரஸ்.. புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு.. ஸ்டாலின் அறிவிப்பு
Recommended Video
சென்னை: திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையே லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணியில் மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது
அதிமுக-பாஜக மற்றும் பாமக நடுவே நேற்று ஒரே நாளில் அதிரடியாக கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டன. ஆனால் நீண்ட கால நண்பர்களான திமுக-காங்கிரஸ் இடையே இன்னும் கூட்டணி ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாகாமல் இழுபறி நீடித்து வந்தது.
இதையடுத்து நேற்று இவ்விரு கட்சிகளும், தேர்தல் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கின.
காங்கிரஸ் கட்சிக்கு 2009ல் 15 சீட்.. இந்த வாட்டி 10.. கூட்டிக் கழிச்சுப் பார்த்தா லாபம்தான்!
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு, திமுக எம்பி கனிமொழி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் வேணுகோபால் ஆகியோர் இன்று சென்னை வந்தனர். கிண்டியிலுள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதன்பிறகு, தலைவர்கள் அறிவாலையம் கிளம்பினர். இரவு 8 மணியளவில் காங்கிரஸ் தலைவர்கள் அறிவாலயம் வருகை தந்தனர். பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
காங்கிரஸ் தரப்பில் முகுல் வாஸ்னிக், வேணுகோபால், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக தரப்பில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையின் முடிவில் தற்போது கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
அதன்படி திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையே லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணியில் மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.