சென்னையில் டேரா போட்டுள்ள திமுக கவுன்சிலர்கள்! சேர்மன் பதவியை குறிவைத்து அரசியல் லாபி!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர்கள் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமிட்டு பதவிகளை குறிவைத்து அரசியல் லாபி செய்து வருகின்றனர்.
மூத்த அமைச்சர்களை பிடித்தால் காரியம் கைகூடும் என்ற நம்பிக்கையில், அமைச்சர்களின் இல்லங்கள் முன்பாக காலை மாலை வேளைகளில் தவம் கிடக்கின்றனர்.
மாநகராட்சிகளை பொறுத்தவரை யார் மேயராக வர வேண்டும் என்பதை திமுக தலைமையே முடிவு செய்யும் என்பதால் அதனை விடுத்து நகர்மன்ற தலைவர் பதவியையும், பேரூராட்சி தலைவர் பதவியையும் அவர்கள் குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் 489 பேரூராட்சிகள் என 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்பு பதவியிடங்களுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் வெளிவந்த நிலையில், திமுக வரலாறு காணாத வெற்றிபெற்று புதிய சாதனையை நிகழ்த்தியது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்துப்பெற வேண்டி தலைநகர் சென்னைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

முக்கியப் பிரமுகர்கள்
நேற்றும், இன்றும் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கவுன்சிலர்களில் பெரும்பாலானோர் மீண்டும் ஊர் திரும்பாமல் சென்னையிலேயே முகாமிட்டு மறைமுகத் தேர்தலில் முக்கியப் பதவிகளில் அமர்வதற்கான வழிமுறைகளை கண்டறிந்து வருகின்றனர். அமைச்சர்கள் நேரு, பொன்முடி என சீனியர்களை பார்த்து கோரிக்கை விடுப்பதோடு ஆ.ராசா உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளை அனுகி நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் பதவியில் அமர லாபி செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

ஸ்டாலின் பிறந்தநாள்
மார்ச் 1-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் என்பதால் இருந்து அந்த விழாவில் கலந்துகொண்ட பிறகு ஊருக்கு புறப்படலாம் என பலரும் முடிவு செய்துவிட்டார்கள் போல் தெரிகிறது. அதனால் தான் சென்னையின் முக்கிய விடுதிகளில் திமுக கொடி கட்டிய கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனிடையே யார் என்னதான் சென்னையில் முகாமிட்டு முயற்சி செய்தாலும் அந்தந்த மாவட்டச் செயலாளரும், அமைச்சரும் என்ன முடிவெடுக்கிறார்களோ அதன்படியே மறைமுகத் தேர்தலில் முக்கியப் பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் எனக் கூறுகிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.

காங்கிரஸ் நிர்வாகிகள்
திமுக கவுன்சிலர்களுக்கு சற்றும் சளைக்காமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் முக்கியப் பிரமுகர்கள் சிலரும் நகராட்சி துணை தலைவர், பேரூராட்சி தலைவர் பதவியிடங்களை குறிவைத்து தங்கள் பங்குக்கு சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகிறார்கள். இதனால் மறைமுகத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications