இன்னும் 6 மணி நேரம்தான் இருக்கு.. ஸ்டாலின் சொன்ன டைம்.. பதறிப்போன ராகுல்.. திக்திக் நிமிடங்கள்!
சென்னை: தமிழக அரசியலில் கோடைக்கால வெயிலை விடக் கூட்டணியின் அனல் அதிகமாகத் தகித்துக்கொண்டிருக்கிறது. "கூட்டணி தர்மம்" என்கிற ஒற்றைச் சொல்லுக்குப் பின்னால், ஒரு பக்கம் அண்ணா அறிவாலயத்தின் கறாரான 'கெடு' (Deadline), மறுபக்கம் சத்தியமூர்த்தி பவனின் 'உரிமைக்குரல்' எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி திணறிக்கொண்டிருக்கிறது.
தேர்தல் களம் என்று வந்துவிட்டாலே, தொகுதிப் பங்கீடு என்பது ஒரு சதுரங்க வேட்டைதான். ஆனால், இந்த முறை நடப்பதோ 'செக்-மேட்' வைக்கும் அரசியல். "நாங்கள் கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கப்போகிறீர்களா? அல்லது தனி வழி தேடப்போகிறீர்களா?" எனத் திமுக தலைமை கொடுத்திருக்கும் மாலை 6 மணி கெடு, காங்கிரஸ் மேலிடத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது.

டெல்லியில் சோனியா, ராகுல், கார்கே, கே.சி.வேணுகோபால் என 'பிக்-4' தலைவர்கள் ஒருபுறம் வீடியோ கான்பரன்ஸில் தீவிரமாக ஆலோசிக்க, இன்னொரு புறம் தமிழகத்தின் மூத்த புள்ளி ப.சிதம்பரம் சமாதானத் தூதுவராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா? அல்லது கூட்டணியே மாற்றப்படுமா? என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை தேடும் அந்தப் பரபரப்பான நிமிடங்களின் தொகுப்பு இதோ...
காலை 10:00 - ப.சி-யுடன் 'செல்வா' ஆலோசனை:
சத்தியமூர்த்தி பவனில் காலையிலேயே காய்நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர் ப.சிதம்பரத்தைச் சந்தித்துப் பேசினார். "சீட் விஷயத்தில் திமுக இறங்கி வரமாட்டேங்குதே..." என்பதுதான் பேச்சின் சாராம்சம். இதெல்லாம் செல்வப்பெருந்தகையின் மக்களின் நிச்சயதார்த்தத்திற்கு இடையே நடக்கும் களேபரம்.
காலை 11:00 - டெல்லியில் 'பிக் 4' மீட்டிங்:
சரியாக 11 மணிக்கு, டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் ஆன் ஆனது. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் என காங்கிரஸின் 'பிக் 4' தலைவர்கள் தீவிர ஆலோசனையில் இறங்கினர். தமிழக சட்டசபை தேர்தல் நிலவரம் மற்றும் திமுகவின் பிடிவாதம் குறித்து அனல் பறக்கும் விவாதம்.
மதியம் 12:30 - 'செல்லக்குமார்' எமர்ஜென்சி கால்:
திடீர் திருப்பமாக, காங்கிரஸ் முன்னாள் எம்பி செல்லக்குமார் அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். செல்வப்பெருந்தகை திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக டெல்லி மேலிடம் கருதுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. "கூட்டணி முறிந்தால் அடுத்த தலைவர் செல்லக்குமார் தான்" என்ற தகவல் இறக்கை கட்டிப் பறக்கிறது.
மதியம் 1:30 - சிதம்பரத்தின் தூது:
இன்று சற்று நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கிறார் ப.சிதம்பரம். இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பல்ல; கூட்டணியைக் காப்பாற்றுவதற்கான 'கடைசி முயற்சி'.
மாலை 6:00 - அந்த 'டெட்லைன்':
திமுக கொடுத்த கெடு இன்று மாலை 6 மணியுடன் முடிகிறது. இதற்கு இன்னும் 6 மணி நேரம்தான் இருக்கிறது. "நாங்க சொன்ன சீட்டுக்கு ஓகேன்னா சொல்லுங்க, இல்லன்னா தனி வழி" என்பதுதான் அறிவாலயத்தின் மெசேஜ். மாநிலங்களவை தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கும் இன்னும் 48 மணி நேரமே இருப்பதால், திமுக அவசரம் காட்டுகிறது.
கள நிலவரம் என்ன?
திமுக பிடிவாதம்: 25 முதல் 28 இடங்களுக்கு மேல் ஒரு சீட் கூடத் தர முடியாது + 1 மாநிலங்களவை சீட் என்பதில் திமுக உறுதி.
காங்கிரஸ் எதிர்பார்ப்பு: 35+ இடங்கள் மற்றும் மாநிலங்களவை சீட்.
விஜய் ஃபேக்டர்: திமுகவுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ராகுல் காந்திக்குத் தமிழகத்தில் இருக்கும் செல்வாக்கை வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்கலாமா என்ற யோசனையும் டெல்லி வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கூட்டணி நீடிக்குமா? அல்லது 'கை' நழுவுமா? இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்!












Click it and Unblock the Notifications