சாதி பெயரை வெளியே சொல்ல அவமானம்.. இந்த நிலைக்கு தமிழர்கள் வர காரணம் யார் தெரியுமா? - கனிமொழி பேச்சு!
சென்னை : சாதிப் பெயரை வெளியில் சொல்வது அவமானம் என்ற நிலைக்கு தமிழர்கள் வந்துள்ளார்கள் என்றால் அந்த சாதனையை செய்தது திராவிட இயக்கம்தான் என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பேசியுள்ளார்.
சாமானிய பிள்ளைகள் படிக்க அரசு மருத்துவ கல்லூரிகள் உருவாக்கினால் நீட்டை கொண்டு வந்து இடமில்லை என்ற நிலைமையை பாஜக உருவாக்கியுள்ளது என கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.
திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய கனிமொழி எம்.பி, கடல் சார்ந்த வாழ்கையை வாழும் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள் தான் எனப் பேசினார்.

திமுக சுற்றுச்சூழல் அணி
சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில், திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் கருத்தரங்கம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி, திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் தா.வேலு மற்றும் ஜெ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெயருக்கு பின்னால் சாதி
இந்த நிகழ்வில் பேசிய கனிமொழி எம்.பி, "நாம் இன்று சமூக நீதியின் மற்றொரு பரிணாமத்தில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஜாதி இன்னும் ஒழிந்து விடவில்லை. மற்ற மாநிலங்களில் சென்று கேட்டால் தங்கள் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை சேர்த்து சொல்வார்கள். தமிழ்நாட்டில் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை போடுவதை ஒழித்தது திராவிட இயக்கங்கள் தான். ஜாதியை பெருமையாக வெளியே செல்வது அவமானம் என்ற நிலைக்கு தமிழர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் அந்தச் சாதனயை செய்தது திராவிட ஆட்சி தான்.

நம்மை ஜாதிக்குள் அடைக்க முடியாது
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல ஐஏஎஸ் அதிகாரிகள் வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை பார்க்கும்போது அவர்களது பெயரை அங்கு இருப்பவர்கள் கேட்பார்கள். அப்போது அவர்கள் பெயருடன் ஜாதி பெயர் இல்லாததால் அவர்களை எங்கு பொருத்துவது என்று அவர்களுக்கு தெரியாது. நம்மை தமிழன் என்று எல்லோருக்கும் தெரியும். நம்மை ஜாதிக்குள் அடைக்க முடியாது. இந்த இடத்திற்கு நாம் வருவதற்கு திராவிட இயக்கத் தலைவர்கள் போராடி பெற்றுத் தந்திருக்கிறார்கள். அதை நாம் மறந்து விடக்கூடாது.

சென்னை நகரம்
ஜாதி என்பது இந்தியாவில் நம்மை தொடர்ந்து பாதித்து வருகிறது. சென்னையை பொருத்தவரை ஜாதி இல்லை என்று நான் சொல்லவில்லை. சென்னை ஜாதியற்றவர்கள் என்ற வாய்ப்பை இன்னும் அதிகமாக தரக்கூடிய நகரம். சாதி என்ற சுமையை தூக்கி எறியக்கூடிய வாய்ப்புகளை சென்னை அதிகமாக உருவாக்கித் தரும். கிராமத்திலிருந்து கொண்டு வந்திருக்கக் கூடிய தேவையற்ற விஷயங்களை தூக்கி எறியக்கூடிய இடம் சென்னை நகரம்.

திராவிட இயக்கம்
எல்லோருக்கும் சமமான படிக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கியது தான் திராவிட இயக்கம். மதிய உணவு திட்டத்தை உண்மையான சத்துணவு திட்டமாக மாற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இன்று பல மாநிலங்கள் அதை பின்பற்றி வருகின்றனர். சாமானிய பிள்ளைகள் படிக்க அரசு மருத்துவ கல்லூரிகள் உருவாக்கினால் நீட்டை கொண்டு வந்து இடமில்லை என்ற நிலைமையை பாஜக உருவாக்கியுள்ளது. நிச்சயம் அதற்கான நீதி நியாயத்தை முதலமைச்சர் பெற்றுக்கொடுப்பார்.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. காலநிலை மாற்றத்தின் அபாயத்தை புரிந்து கொண்டு அரசு தன் செயல்பாடுகளை முன்னெடுத்து வைத்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் எல்லா உணவுகளிலும் உள்ளது. தாய் பாலில் கூட பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளது என்ற செய்தியை பார்க்கிறோம். அதற்காக தான் மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டுவரப்பட்டது. இது மட்டும் போதாது. இன்று நமது குழந்தைகளுக்கு நிறையை விட்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். அவர்களுக்கு இந்த உலகத்தையாவது விட்டு செல்வோம்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications