அமைச்சரவை மாற்றத்துக்கு முன்னாடி மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்! வேலையை ஆரம்பிக்கும் திமுக தலைமை!
சென்னை: அமைச்சரவை மாற்றத்துக்கு முன்னர் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் திமுகவில் அரங்கேறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் மீது அதிக புகார்கள் வந்துள்ளன அவர்கள் இதுவரை கட்சிக்காகவும், தேர்தலின் போதும் ஆற்றிய பணிகள் என்னென்ன என்பது பற்றியும் ஜல்லடை போட்டு அலசி ஆராயப்பட்டு வருகிறதாம்.
நேரடி நியமனம் மூலமும், உட்கட்சித் தேர்தல் வழியாகவும் முதல்வர் ஸ்டாலின் சில அதிரடிகளை நிகழ்த்துவார் எனத் தெரிவிக்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.

மாவட்டச் செயலாளர்கள்
கடந்த சனிக்கிழமை அன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்திய முதல்வர் ஸ்டாலின், அதில் பொத்தாம் பொதுவாக எல்லோரையும் வெளுத்து வாங்கியிருந்தார். குறிப்பிட்ட சிலர் மீது தனக்கு கடும் அதிருப்தி இருந்தாலும் அதனை அவர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொதுவான முறையில் எச்சரிக்கும் தொணியில் பேசி அனுப்பி வைத்தார். அப்போதே தங்கள் பதவிக்கு ஆபத்து வரப் போகிறது என்பதை ஒரு சில மாவட்டச் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் யூகித்துவிட்டனர்.

அரசியல் லாபி
இதையடுத்து லாபி செய்ய வேண்டிய இடங்களில் லாபி செய்து நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஏதோதோ வழிகளில் சிலர் முயற்சிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் இது எந்தளவு பலனளிக்கும் எனத் தெரியவில்லை. காரணம் திமுக தலைவராக இருப்பவர் ஸ்டாலின். கருணாநிதி காலத்தில் வேண்டுமானால் இந்த லாபி அரசியல் அவர்கள் ஒர்க் அவுட் ஆகியிருக்கலாம். ஆனால் அந்தப் பாட்சா, முதல்வர் ஸ்டாலினிடம் பலிக்குமா என்பது சந்தேகம் தான்.

உட்கட்சித் தேர்தல்
ஒரு சில மாவட்டச் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அளவு கடந்த கோபம் இருப்பினும் கூட, உடனடி நடவடிக்கையை அவர் தள்ளி போடுவதற்கு காரணம் உட்கட்சித் தேர்தல் தானாம். இதில் கொடுமை என்னவென்றால் உட்கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் மாவட்டச் செயலாளர்களுடன் சிண்டிகேட் போட்டு செயல்பட்டது தான். இது தொடர்பான புகார் ஓலைகளும் கத்தை கத்தையாக அறிவாலயத்துக்கு வருகிறதாம்.

ஆட்சிப்பணிகள்
ஆட்சிப் பணிகளில் நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், கட்சிப்பணிகள், நிர்வாகிகள் மீதான புகார்கள், குறித்து நாள் தவறாமல் அறிவாலய புள்ளிகளை தொடர்புகொண்டு கேட்டறிந்து கொள்கிறாராம். யார் மீதெல்லாம் முதல்வருக்கு கடுமையான அதிருப்தி இருக்கிறதோ, அந்த நபர்களை மாவட்டச் செயலாளர் தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும்படி ஆர்டர் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லையாம்.












Click it and Unblock the Notifications