3வது அணியை விரும்பாத திமுக! சந்திரசேகர ராவ் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் ஸ்டாலின் சூசகம்!
சந்திரசேகர ராவின் 3வது அணி அமைக்கும் முயற்சியை திமுக விரும்பவில்லை.
சென்னை: தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் 3வது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ''நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் தெலங்கானா மாநில மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும்'' எனக் கூறி பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் இந்திய மக்களுக்கு பணியாற்ற வேண்டும் எனக் கூறாததன் மூலம் சந்திரசேகர ராவின் 3வது அணி அமைக்கும் முயற்சியை முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.
தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி சார்பில் நடத்தப்படும் பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளபோதும் அதில் ஸ்டாலின் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

3வது அணி
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 3வது அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் பிஆர்எஸ் கட்சியின் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ். காங்கிரஸ், பாஜக, அல்லாத கூட்டணியில் திமுகவை இடம்பெற வைக்க சந்திரசேகர ராவ் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தனது பிறந்தநாளையொட்டி நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்க வருமாறு ஸ்டாலினுக்கு கூட அழைப்பு விடுத்திருக்கிறார்.

நீண்ட காலம்
இதனிடையே 3வது அணி அமைந்தால் அது வாக்குகள் சிதறி பாஜகவுக்கு தான் சாதகமாக போகும் என்பதால் அதனை திமுக ரசிக்கவில்லை. இந்தச் சூழலில் தான் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு ஸ்டாலின் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ''நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் தெலங்கானா மாநில மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவரை மாநில அரசியல் தலைவராக மட்டும் ஸ்டாலின் சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

யார் யாருக்கு அழைப்பு
சந்திரசேகர் ராவ் பிரதமர் வேட்பாளராகும் திட்டத்தில் இருக்கும் நிலையில் ஸ்டாலின் இப்படியொரு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதனிடையே '' பிரிவினை அரசியலை எதிர்த்துப் போராட வேண்டும்'' என்று மட்டும் சந்திரசேகர ராவை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், தேவகவுடா ஆகியோர் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் நடத்தப்படும் சந்திரசேகர ராவ் பிறந்தநாள் விழா மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

முதல் கூட்டம்
இதனிடையே தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சியின் பெயரை பாரத ராஷ்டிர சமிதி என பெயர் மாற்றம் செய்த பிறகு சந்திரசேகர் ராவ் நடத்தும் முதல் மாநாடு என்பதால் இதில் சில முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முடிவுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications