திமுக தேர்தல் அறிக்கையில்... முதல் வாக்குறுதி... திருக்குறளை தேசிய நூலாக்க நடவடிக்கை!
சென்னை: இன்று வெளியான திமுக தேர்தல் அறிக்கையில், திருக்குறளை தேசிய நூலாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. பின்னர், மே 2ஆம் தேதி புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
திமுகவின் இந்த தேர்தல் அறிக்கை 500 வாக்குறுதிகளைக் கொண்டிருந்தது. இதில் முக்கிய வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் வாசித்தார். அதில் முதல் வாக்குறுதியாகத் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
ஏற்கனவே, பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி என நாட்டின் முக்கிய தலைவர்கள் பலரும் பொதுக்கூட்டங்களில் திருக்குறளைக் குறிப்பிட்டுப் பேசி வரும் சூழ்நிலையில், திமுக திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.