திமுக தேர்தல் அறிக்கை சட்டசபை தேர்தலில் ஜீரோதான் - பாஜக தலைவர் எல். முருகன்
திமுக தேர்தல் அறிக்கை வரும் தேர்தலில் ஜீரோவாக தான் இருக்கும் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
சென்னை: திமுக தேர்தல் அறிக்கை வரும் தேர்தலில் ஜீரோவாக தான் இருக்கும் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ஊராட்சியில் தலித் விவகாரத்தில் திமுக தலைவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்றும் கேட்டுள்ளார் எல். முருகன்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் பரபரப்பாக களப்பணியாற்றி வருகின்றன. கொரோனா பரவல் அச்சம் இருந்தாலும் தொண்டர்களுடன் சந்திப்பு,நிர்வாகிகளுடன் கூட்டம் என்று பிசியாகவே இருக்கின்றனர் தலைவர்கள்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் பிசியாகிவிட்டது திமுக. 8 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதனிடையே சென்னை அடையாறில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசும் போது, கடந்த சட்டசபை தேர்தலைப் போல திமுக தேர்தல் அறிக்கை வரும் தேர்தலில் ஜீரோவாக தான் இருக்கும் என்றார்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். பாஜகவில் தொடர்ந்து பலர் இணைந்து வருகின்றனர் என்று கூறினார்.
நமீதாவும், குஷ்புவும்தான் தாமரையை மலர வைக்க போறாங்களா? வெறும் ஸ்டார் கூட்டம் போதுமா.. சரமாரி கேள்வி
சமூகத்தில் ஒற்றுமை நிலவ அரசு குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் ஊராட்சியில் தலித் விவகாரத்தில் திமுக தலைவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது பாஜக தேர்தல் அறிக்கையை ஜீரோ என்றும் திமுக தேர்தல் அறிக்கையை ஹீரோ என்றும் தெரிவித்தார். அதற்கு பதிலடி தரும் விதமாக திமுகவின் தேர்தல் அறிக்கை ஜீரோவாக இருக்கும் என்று கிண்டலடித்துள்ளார் எல். முருகன்.