மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி.. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
சென்னை: 30 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சிலிண்டர் மானியம், வட்டியில்லா கடன் என வாக்காளர்களைக் கவரும் பல்வேறு அறிவிப்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
500 வாக்குறுதிகள்
திமுக வெளியிட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. அதில் முதல் வாக்குறுதியாகத் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிர இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
கல்விக்கடன் ரத்து
அதன்படி 30 வயதுக்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த தேர்தலின் போதே மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சென்ற முறை திமுகவால் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியவில்லை.
ஸ்டாலின் உறுதி
சமீபத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்திலும்கூட, இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு திமுக ஆட்சியில் கல்விக் கடன்களை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு க ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், தற்போது திமுக தேர்தல் அறிக்கையிலேயே 30 வயதுக்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பட்டியலில் கல்வி
மேலும், தற்போது ஒத்திசைவு பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.