சென்னையில்.. டிராபிக் கான்ஸ்டபிளை ஓங்கியறைந்த திமுக பிரமுகர்.. தட்டி தூக்கிய போலீஸ்
தகராறு செய்த இளைஞரை தட்டிக்கேட்ட காவலரை, திமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னையின் முக்கிய சாலையில் தகராறில் ஈடுபட்டு வந்த இளைஞரை தட்டிக்கேட்ட காவலரை, திமுக பிரமுகர் கன்னத்தில் அறைந்து செல்போனை பறித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர் புகாரளித்ததன் பேரில், திமுக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்தில் இருந்து சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். அதேபோல் திமுகவினர் மீதும் எதிர்க்கட்சிகள் அதிகளவில் விமர்சனங்கள் வைத்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் திமுக பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் இருவர் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விவாதமாகியது. இதனால் காவல்துறையின் கைகளை திமுக கட்டிப்போட்டுள்ளதாக பேச்சுகள் எழுந்தன.

காவலர் முத்துச்செல்வன்
இந்த நிலையில் சென்னையில் முக்கியப் பகுதியில் தகராறில் ஈடுபட்ட இளைஞரை தட்டிக்கேட்ட போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்த திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் முத்துச்செல்வன். 40 வயதாகும் இவர் அண்ணாநகர் போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இடையூறு செய்த இளைஞர்
நேற்றிரவு காவலர் முத்துச்செல்வன் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அமைந்தகரை என்.எஸ்.கே.நகர் அருகில் வரும்போது, மனநலம் குன்றிய ஒருவர் சாலையின் நடுவே நின்றுகொண்டு, அவ்வழியாக செல்வோரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டு வந்ததை பார்த்துள்ளார். இதன் பின்னர் காவலர் முத்துசெல்வன், உடனே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த இளைஞரிடம் சென்று இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என எச்சரித்துள்ளார்.

காவலர் மீது தாக்குதல்
தொடர்ந்து, இளைஞர் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டி செல்போனை முத்துச்செல்வன் எடுத்துள்ளார். அப்போது அருகில் காரில் மது அருந்தி கொண்டிருந்த நபர் ஒருவர், காவலர் முத்துச்செல்வனிடம், நீ யார்? இதை செய்வதற்கு என கேட்டு அவரை தகாத வார்த்தையில் திட்டி அவரை கன்னத்தில் அறைந்ததுடன் அவரது செல்போனை பறித்துக் கொண்டார்.

திமுக பிரமுகர்
இதன் பின்னர் காவலர் முத்துச்செல்வன் இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸாரை தாக்கிய அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அமைந்தகரை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பதும், இவர் திமுகவில் மேற்கு மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை தலைவராக இருப்பதும் தெரியவந்தது.

திமுக பிரமுகர் கைது
இதனையடுத்து திமுக பிரமுகர் கண்ணன் மீது அரசு ஊழியரை தாக்குதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பொதுவெளியில் மக்களுக்கு இடையூறு செய்த இளைஞரை தட்டிக்கேட்ட காவலர் மீது திமுக பிரமுகர் தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications