திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. பரபரப்பு புகாரால் வரிந்துகட்டி வந்த எதிர்க்கட்சிகள்!
சென்னை: திமுக நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளராக இருந்து வந்த கடையம் சந்திரசேகர் அதிரடியாக கட்சியில் இருந்து விலகியுள்ளார். திமுக அட்சியில் கனிம வளக் கொள்ளையை தடுக்க முடியாததால் தனது பொறுப்பில் இருந்தும் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக கயையம் சந்திரசேகர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.
இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ள சந்திரசேகர் அதில், "திராவிட முன்னேற்றக் கழகத்தில் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளராக கழக பணியாற்றினேன். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றியத்தில் ஏராளமான கணி வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. கனரக வாகனங்களால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் தீமைகளை பற்றி பலமுறை தங்களுக்கு எடுத்துரைத்தும் பலன் இல்லை. மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளராக இருந்து கொண்டு எங்கள் பகுதி சுற்றுச்சூழலை காப்பாற்ற, பாதுகாக்க முடியவில்லை. எனவே எனது பொறுப்பிலிருந்து விலகுகிறேன். நான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரிடத்தில் சுயமரியாதையை கற்ற மாணவன் ஆகவே எனது சுயமரியாதையை காப்பாற்ற அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனைச் சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் தங்குதடையற்ற சட்டவிரோத கனிமக் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் திமுக அரசு வேண்டுமென்றே செயலற்று இருப்பதைக் கண்டித்து, ஒரு திமுக நிர்வாகி தனது கட்சிப் பதவியையும் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
இந்தக் கடுமையான பிரச்சனையை அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிய போதிலும், எந்தவிதமான சீர்திருத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சட்டவிரோத சுரங்கம் என்பது தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றிய ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இருந்தபோதிலும், ஊழல் நிறைந்த இந்த திமுக ஆட்சியின் முன்னுரிமைப் பட்டியலில் இது கடைசி இடத்தில்கூட இடம்பெறவில்லை. இந்தச் சட்டவிரோதச் செயல்களுக்கு முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் இருவருமே முக்கியத் துணை நின்றிருக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான லாரிகள் சட்டவிரோதமாக மாநில எல்லைகள் வழியாக கனிமங்களைக் கடத்திச் செல்கின்றன. இது அப்பகுதி மக்களுக்குச் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்துவதுடன், பிராந்தியத்தின் இயற்கை வளங்களின் மீளமுடியாத அழிவையும் வேகப்படுத்துகிறது. உண்மையான பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, பிரச்சனையை எழுப்பியவரைக் களங்கப்படுத்துவதிலேயே திமுக இப்போது தனது அனைத்து வளங்களையும் செலவிடும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி, "தென் மாவட்டங்களில் கனிமக்கொள்ளையை தடுக்க முடியாததால் மானமுள்ள திமுக நிர்வாகி விலகியுள்ளார். இனியாவது முதல்வர் விழிப்பாரா, சீரழிப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தென் மாவட்டங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கனிமக் கொள்ளை நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கேரளத்திற்கு கடத்திச் செல்லப்படுகின்றன; கனிமக் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு காட்பாதராக இருந்து திமுகவின் பெரும்புள்ளி ஒருவர் பாதுகாக்கிறார் என்று பல ஆண்டுகளாக நான் குற்றஞ்சாட்டி வருகிறேன். அவை அனைத்தும் உண்மை என்று இப்போது திமுக நிர்வாகியின் வாக்குமூலத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக போராட வேண்டிய திமுக நிர்வாகியாலேயே தடுக்க முடியவில்லை; கனிமக் கொள்ளை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திமுக நிர்வாகியே புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல செய்திகளை இந்த ஒற்றை பதவி விலகல் கடிதம் கூறுகிறது.
இனியாவது கனிமக் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது முதல்வர் ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை வாக்கு என்னும் ஆயுதத்தைக் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகி விலகலைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருப்பது திமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications